அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! கடந்த சில நாட்களுக்கு முன் நமது
ஜமாஅத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அப்பாஸ் அலி அவர்கள், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்
குர்ஆனுக்கு முரண்படுமா? என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தியிருந்தார்.
அதில் எவற்றையெல்லாம் இவர் நமது ஜமாத்திலிருக்கும் போது ஆதாரங்களாக
சமர்ப்பித்து கொண்டிருந்தாரோ, அவைகளை தற்போது நமக்கு எதிராகவும் நாம் இட்டுக்கட்டி
சொல்லிக் கொண்டிருப்பதை போன்றும் பேசித் திரிகிறார்.
இவர் எடுத்து வைக்கும் உப்பு சப்பில்லாத வாதங்களுக்கு ஒவ்வொன்றாக இன்ஷா பதில் அளிக்கப்படும்...
அப்பாஸ் அலியின் வாதம்:
முதலாவதாக, உமர் (ரலி) அவர்களுக்கும் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
அவர்களுக்கும் இடையே நடந்த தலாக் சம்மந்தமான உரையாடலை, குர்ஆனிற்கு முரணாக
ஆதாரப்பூர்வமான செய்தி இருந்தாலும் அதனை ஏற்க்கக்கூடாது என்பதற்கு நாம் ஆதாரமாக
காட்டி வருகிறோம். இந்த செய்தியில் அப்படி ஒரு கருத்தே இல்லை என்றும் உமர் (ரலி)
அவர்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சாட்சிகளோடு இந்த தகவலை
நிரூபித்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் தான் கூறினார்களே தவிர, இது
முழுமையாகவே மறுக்கப்பட வேண்டியது, குராஆனிற்கு முரண்படுகிறது என்று உமர் (ரலி)
அவர்கள் கூறவில்லை. பொதுவாக உமர் (ரலி) அவர்கள் எந்த தகவலாக இருந்தாலும் சாட்சி
கேட்பார்கள். ஆகவே, இறுதி தலாக் விடப்பட்ட பெண்ணிற்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை
என்பதை சாட்சி மூலமாக நிரூபிக்க சொன்னார்களே தவிர பொத்தாம் பொதுவாக இந்த செய்தியை
மறுக்கவில்லை. இதில் எங்கே குராஆனிற்கு முரண் என்ற தலைப்பு உள்ளது? என்று அப்பாஸ்
அலி வாதத்தை எடுத்து வைக்கிறார்.
பதில்:
சகோதரர் (ஆய்வாளர்???!!!) அப்பாஸ் அலி அவர்களே!
தன்னோடு வாதிக்க ஒரு அரபு பண்ணிடிதர்தான் வர வேண்டும் என்று விரட்டப்பட்ட
நேரத்தில் அடம்பிடித்தீர்கள். உங்களது பேச்சை கவனிக்கும் போது அந்த லிஸ்டில்
முதலில் நீங்களே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். முதலில் உமர் ரழியல்லாஹு
அன்ஹு என்று தெளிவாக சொல்ல பழகுங்கள். பிறகு பேசலாம் அரபு புலமையை பற்றி!
வாதத்திற்கு வருவோம். இவர் சுட்டிக்காட்டி
இருக்கும் இந்த செய்தியை பொறுத்த வரைக்கும் இதில் உமர் (ரலி) அவர்கள் இந்த செய்தியை
குர்ஆன் வசனத்தை முன் வைத்து மறுத்து விட்டார்கள், ஆகவே ஃபாத்திமா பின்த் கைஸ்
(ரலி) அவர்களின் தகவல் பொய் என்று வாதிடுவதற்கா நாம் இந்த செய்தியை எடுத்து
வைக்கிறோம்? அப்படி அல்ல. மாறாக, உமர் (ரலி) அவர்கள் இந்த தகவலை எப்படி
அணுகினார்கள் என்பது தான் நமது வாதம்.
உமர் (ரலி) அவர்கள் அறிந்து வைந்திருந்த
திருமறை வசனத்திற்கு ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறிய செய்தி முரணாக
தோன்றியது. ஆகவே தான் உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்கவில்லை. ஒரு பெண்ணின்
சொல்லிற்காக அல்லாஹ்வின் வார்த்தையையும் நபியின் வழி முறையையும் நாம் விட மாட்டோம்
என்று கூறினார்கள். பிறகு சாட்சிகள் கிடைக்குமானால் ஏற்பேன் என்று சொன்னதாக ஒரு
செய்தியையும் அப்பாஸ் அலி சுட்டிக்காட்டினார், ஆம் அந்த காலகட்டத்தில் சஹாபாக்கள்
தான் பெருமளவில் வாழ்கின்றனர். அவர்களது பெருவாரியான சாட்சியை யாரும் மறுக்க மாட்டார்கள்.
ஆகவே, ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் சாட்சியோடு அந்தத் தகவலை
நிரூபித்திருக்கலாம், அதை உமர் (ரலி) அவர்கள் ஏற்றும் இருக்கலாம். இதற்கு வெளிப்படையான
தகவல் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் உமர் (ரலி) அவர்கள் எடுத்து வைத்த வாதம்
தெள்ளத்தெளிவாக ஹதீஸில் இடம்பிடித்திருக்கும் போது இதில் குர்ஆனிற்கு முரண் என்ற
தகவல் எங்கே உள்ளது என்று கேட்பது மடமை.
நன்றாக விளங்கி கொள்ளவும், இந்த தகவல்
மொத்தமாகவே மறுக்கப்பட்டதா அல்லது பிறகு உமர் (ரலி) அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா
என்பதல்ல நமது வாதம். குர்ஆன் வசனத்திற்கு எந்த வகையிலும் ஒப்பிட முடியாத வண்ணம்
ஒரு தகவல் முரண்படுமேயானால் அதை நபியவர்கள் கூறி இருக்க மாட்டார்கள் என்பதே இந்த
சம்பவத்திலிருந்து நாம் எடுத்து வைக்கும் வாதம். ஆகவே தான், “ஹதீஸ்கள் குரானுக்கு
முரண்படுமா?” என்ற (அப்பாஸ் அலி எழுதிய) புத்தகத்திலும் கூட இந்த தகவலை மக்கள்
மத்தியில் எடுத்து வைக்கும் போது, குர்ஆனிற்கு முரணான செய்தி என்று தலைப்பிடாமல் “உமர்
(ரலி) அவர்கள் கடைபிடித்த வழிமுறை” என்றே தலைப்பிட்டுள்ளோம். இவை அனைத்தும் இந்த
புத்தகத்தை எழுதிய ஆய்வாளர்???!!! அப்பாஸ் அலிக்கு மிகத்தெளிவாகவே தெரியும்.
இருந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத வேறு எந்த நபர்கள் எதை செய்தாலும் எதை
சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் இயல்பிலேயே வார்த்தெடுக்கப்பட்ட கொள்கை கோமாளிகளுக்கு இவைகளை
பற்றி சிந்திக்கவெல்லாம் நேரம் இருப்பதில்லை. ஆகவே அவர்களிடம் எதை வேண்டுமானாலும்
உளறிக் கொட்டலாம் என்ற நிலைக்கு அப்பாஸ் அலி உருவெடுத்துள்ளதை இதுபோன்ற
திரிக்கப்படும் உரைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும், உமர் (ரலி) அவர்களிடம் நடைபெற்றதை
போன்ற நிகழ்வுகள் இன்றைய கால சூழலில் நடக்குமா? இன்றைக்கு ஒரு செய்தி குர்ஆனிற்கு
முரணாக உள்ளது என்று நாம் விளங்கினால், சாட்சி கொண்டு வர சஹாபாக்களா உள்ளனர்? மாறாக
அவர்கள் அறிவித்ததாக வரும் தகவல்கள் தான் நம்மிடம் உள்ளன. அந்த தகவல்களை கொண்டும்
கூட எந்த வகையிலும் சரியாக இதுபோன்ற ஹதீஸ்களை விளங்க முடியாது அவை முரணாகத்தான்
வருகிறது என்று விளங்குமேயானால், அவற்றை நாம் குர்ஆனைவிட மிகைப்படுத்தி விடாமல்,
மறுக்கத்தான் வேண்டும். இதே அடிப்படையைத்தான் உமர் (ரலி) அவர்கள் அந்த சம்பவத்தில்
கையாண்டிருக்கிரார்கள் என்பதுதான் நமது வாதம்.
மேலும், உமர் (ரலி) அவர்கள் எதையெடுத்தாலும்
சாட்சி கொண்டு வர சொல்லுவார்கள் என்று மேலும் ஒரு ஆதாரத்தையும் சம்மந்தமே இல்லாமல்
அப்பாஸ் அலி முன் வைத்தார். மூன்று முறை ஸலாம் கூறப்பட்டும் பதில் தரப்படவில்லை
என்றால் திரும்பி விடுங்கள் என்ற செய்தி தான் அது. இதற்கு உமர் (ரலி) அவர்கள் அபூ
மூஸா (ரலி) அவர்களிடம் சாட்சி கேட்டார்கள், சாட்சி கொண்டு வரப்பட்டது. ஆகவே இது
அவர்களது இயற்கை பண்பு. இதைதான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் உமர்
அவர்கள் கேட்டார்களே அன்றி அதை மறுக்கவில்லை என்று விளங்காத வாதத்தை வைக்கிறார்.
இவர் ஒப்பிட்டிருக்கும் இரண்டு
சம்பவங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன.
அனுமதி கோரும் செய்தியை பொறுத்த வரைக்கும் அந்த
செய்தியே உமர் (ரலி) அவர்கள் அதுவரை கேள்வி படாத செய்தியாகும். ஆகவே சாட்சி
கேட்டார்கள்.
ஆனால், தலாக் சம்பவத்தை பொறுத்த வரை
அதைப்பற்றிய இறைவசனத்தை உமர் (ரலி) அவர்கள் அறிந்து தான் வைத்திருந்தார்கள்.
அவர்கள் அறிந்திருக்கும் இறை வசனத்திற்கு மாற்றமாக ஒரு பெண் ஒரு செய்தியை
தெரியப்படுத்தும் போது அதை உமர் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டு சாட்சி கொண்டு வரச்
சொன்னார்கள்.
இரண்டு சம்பவங்களையும் நுணுக்கமாக கவனித்தால் வித்தியாசத்தை
விளங்கிக் கொள்ளலாம். இவர் எடுத்து வைக்கும் வாதம் உப்பு சப்பற்றது என்பதையும்
விளங்கலாம்.
அனுமதி கோரல் தொடர்பான செய்தியை (புகாரி 6245) உமர் (ரலி) அவர்கள்
மறுக்கவில்லை, மாறாக அல்லாஹ்வின் மீதாணையாக இதை நபியவர்கள் சொன்னார்கள் என்பதற்கான
சாட்சியை நீங்கள் கொண்டு வர வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். அதிலும் குறிப்பாக
எந்தக் காரணத்தையோ வாதத்தையோ முன் வைத்துவிட்டு சாட்சியை கொண்டு வருமாறு அவர்கள்
கேட்கவில்லை!
ஆனால், தலாக் தொடர்பான செய்தியில் நீங்கள்
தெளிவாக அறிந்து கொள்ளலாம், உமர் (ரலி) அவர்கள் சாட்சி கேட்டிருந்தாலும், ஒரு
அடிப்படையான வாதத்தை முன் வைத்துவிட்டுத்தான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
அவர்களின் தகவலை மறுக்கிறார்கள். அந்த வாதம் எதுவோ அதைத்தான் நாம் ஆதாரமாக
சுட்டிக் காட்டுகிறோம். இப்படியெல்லாம் பதில் தரப்பட்ட பின், சஹாபாக்களை
பின்பற்றக்கூடாது என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு இதற்கு மட்டும் சஹாபாக்கள்
தேவையா? என்ற ஒரு கேள்வியை நம்மை எதிர்ப்பவர்கள் முன்வைப்பார்கள். காரணம்
இதற்குமேல் பதிலளிக்க அவர்களிடம் சரக்கு இல்லை என்பதே! இருப்பினும் அதற்கும் நாம்
பதிலளித்து விடுவோம்.
சஹாபாக்கள் மட்டுமல்ல, பல இமாம்களும் இதே
வாதத்தை முன் வைத்து ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள் என்றும் நாங்கள் உதாரணம்
காட்டுகிறோம். அதற்கு அர்த்தம் இமாம்களையும் பின்பற்றுவது என்பதல்ல. இந்த
ஆதாரங்களை நாங்கள் எடுத்து வைக்க முழு காரணமே, இந்த ஜமாஅத்தை எதிர்க்கும் எதிர்தரப்பு
உலமா சபையினர் தான். உலகத்தில் யாருமே கூறாத புதிய கொள்கையை கூறுகிறார்கள். சஹாபாக்கள் கூறினார்களா? அதற்கு
அடுத்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த இமாம்கள் கூறினார்களா? எங்கிருந்து வந்தது இந்த
கொள்கை? இது முஃதஸிலாக்களின் கொள்கை என்றெல்லாம் சகட்டுமேனிக்கு வரிந்து
கட்டிக்கொண்டு எம்மை வர்ணித்தவர்கள் இந்த உலமாக்கள் தான். இவர்களின் ஏக வசனங்களால்
தான் நாம் இதுபோன்ற ஆதாரங்களை சமர்ப்பிக்கிறோம். இந்த ஆதாரங்களை
சமர்பிக்காவிட்டாலும் கூட நாம் கூறும் இந்தக் கொள்கை பல வகைகளில் நியாயமுடையது
தான். என்றாலும், சஹாபாக்கள் தொடக்கம் பல சிறந்த இமாம்கள், அறிஞர்கள் வரை இதே
கொள்கையில் இருந்துள்ளார்கள் என்ற வகையிலான ஆதாரங்களை அள்ளி வீசுகிறோம்!
எவ்வளவு ஆதாரங்களோடு விளக்கமளித்தாலும், இறைவன்
எவரது உள்ளத்தை சிந்திக்க விடாமல் தடுத்து விட்டானோ அவர்களை நேர்வழி படுத்த நம்மால்
இயலாது! அல்லாஹ் விளங்கி செயல்படக்கூடிய உள்ளத்தை நம் அனைவருக்கும் தருவானாக!
No comments:
Post a Comment