இந்த உலகில் மனிதன் உணர்ந்து கொள்ளாத எண்ணற்ற இறைவனது அருட்கொடைகள் உள்ளன.
அவற்றில் பிரதானமான ஒன்று தான் மறதி ஆகும். பொதுவாகவே மறதி என்ற பண்பை
பொருத்தவரைக்கும் நாம் அதை ஒரு பலவீனமான நிலையாகத்தான் பார்க்கிறோம். காரணம்
உண்மையில் மறதி என்ற பண்பால் நமது வாழ்வில் ஏராளமான நஷடன்களை நாம்
அடைந்திருக்கிறோம், இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.
உதாரணமாக, சிறு வயதில் தாய் ஒரு வேலை சொல்லி கடைக்கு அனுப்ப, விளையாட்டு
மோகத்தில் அந்த வேலையை மறந்துவிட்டு பலமணி நேரம் கழித்து அந்த வேலையை
முடிக்காமலேயே வீடு வந்து, அதனால் தாயிடம் செமத்தியாக அடி உதைகளை வாங்கி
இருப்போம்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியை கொடுத்த வீட்டுப்பாடத்தை முறையாக செய்யாமல் மறந்து
விட்டு, அடுத்த நாள் பள்ளி ஆசிரியையிடம் அடி வாங்கி இருப்போம்.
கல்லூரியில் நடக்கும் பிராக்டிக்கல் பரீட்சைக்காக தயார் செய்ய வேண்டிய பிராக்டிக்கல்
நோட்டு புத்தகத்தை சரியான நேரத்திற்குள் தயார் செய்யாமல் மறந்து விட்டு, கடைசி
நேரத்தில் தேர்ச்சியா தோழ்வியா என்ற பதட்டத்தோடு ஆசிரியை முன்னாள் நின்றிருப்போம்.
வேலை நிமித்தமாக இன்டர்வியூ செல்ல நேரிடும்போது ஏதாவது முக்கியமான பிரதிகளை
நாம் எடுத்துச்செல்ல மறந்திருப்போம். அந்த ஒரு காரணத்தால் நமக்கு அத்தகைய சிறந்த
வேலை கிடைக்காமல் போயிருக்கலாம். இன்னும் பல....
இப்படியாக நமது வாழ்வில் சிறு வயது முதல் பெரிய வயது வரைக்கும் அந்தந்த
பருவத்திற்கு ஏற்றவாறு மறதியால் பல சோதனைகளை நாம் கண்டிருப்போம். ஆகவே மறதி
என்றாலே அது ஒரு பெரிய சோதனை என்பது மட்டும் தான் நமது நினைவில் பெரும்பாலும்
நிற்கும்.
ஆம்! மறதி என்பது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒருவகையான சோதனைதான்.
என்றாலும் இது மனிதனுக்கு அருட்கொடையாகவும் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மனிதன்
சிந்திப்பதில்லை.
மறதி என்ற ஒரு பண்பு மட்டும் நமது வாழ்வில் இல்லையென்றால், நாம் இழந்த இழப்புக்களை
மறந்துவிட்டு இயல்பு வாழ்வில் ஒருபோதும் செயல்பட முடியாது என்பதை நாம் மறந்து
விடக் கூடாது. ஆகவே தான் இயற்கையாகவே சில நாட்களில் மறந்துபோகும் இழப்புக்களின்
நினைவுகளை, சில நபர்கள் தொடர்ந்து நியாபகப்படுத்திக் கொண்டே இருந்து இறுதியில்
தற்கொலை செய்து கொள்கின்றனர். பொறுமையோடு இருந்தால் இழப்புக்கள் மறைந்து போகும். இவ்வாறு
உள்ளத்தில் பெரும் பாரமாக இருக்கும் இழப்புக்கள் மறந்து போவதற்கு எல்லாம் வல்ல
இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கும் பேரருள் மறதி ஆகும். இந்த வகையில் மறதி என்பது
இறைவனின் மிகப்பெரிய அருளாகவும் மாறிவிடுகிறது.
ஆசையோடு ஈன்றெடுத்து பாசத்தையும் நேசத்தையும் அதனின் மீது பொழிந்து
வளர்க்கப்படும் தமது ஆருயிர் குழந்தை இறைவன் நாட்டமிருந்தால் மரணித்து விடும்.
தொடைக்குழியை அடைத்துக் கொள்ளும் மிகப்பெரிய துக்கம் இது. பெற்றோர்களால் சகித்துக்
கொள்ள முடியாத மிகப்பெரிய வேதனை இது. ஆகவே தான் அல்லாஹ் இதுபோன்ற சூழலில் பொறுமை
காக்கும் நல்லுள்ளங்களுக்கு பரிசாக சுவர்க்கத்தை அறிவிக்கிறான். இப்படிப்பட்ட
சூழலை இந்த உலகில் சந்தித்த பல கோடி பெற்றோர்கள் உண்டு. சில நாட்கள் கடந்த பின்னர்
அந்த துக்கத்தை எல்லாம் மறந்துவிட்டு இயல்பு வாழ்வில் செயல்பட்டு கொண்டிருக்கும்
பெற்றோர்களை நாம் காண்கிறோமே! இவைகள் நமக்கு உணர்த்துவது என்ன???
(இதுபோன்ற இழப்புக்களை சொல்ல ஏராளமான உதாரணங்கள் உள்ளன, எழுத்து அதிகமாவதால்
சுருக்கிக் கொள்கிறேன்).
ஒரு மனிதன் என்னதான் சோதனையில் சிக்கித் தவித்தாலும் பொறுமையோடு அதனை
சகித்துக் கொண்டால், அந்த சோதனைகளை அல்லாஹ் அவனது உள்ளத்தில் மறதி என்ற குணத்தின்
மூலம் அப்புறப்படுத்துகிறான் என்ற விவரத்தை புரிகிறோம் அல்லவா???
எனதருமை சகோதர சகோதரிகளே! மறதியும் ஒரு வகையில் இறைவனின் அருள் தான் என்பதை
நம்மில் சிலர் இன்றைக்குத்தான் புதுமையாக கேள்வி பட்டிருக்கக்கூடும். இது போன்ற
எண்ணிலடங்கா இறைவனது அருட்பாக்கியங்கள் நம்மை சூழ இருக்கின்றன. ஆனால் அவற்றையும்
நாம் முறையாக உணராமல் தான் வாழ்ந்து வருகிறோம்!
அல்லாஹ் நமது இந்த மோசமான நிலையை மாற்ற வேண்டும். இறைவனது அருள்களை முழுமையாக
சிந்தித்து உணர்ந்து, சதாவும் அவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய நற்சிந்தனையுடைய உள்ளங்களை
அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள வேண்டும் என பிரார்த்தித்து முடிக்கிறேன்.
நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின்
அருட்கொடைகளை நீங்கள் எண்ண முற்பட்டால் அதை உங்களால் எண்ணி முடிக்க முடியாது. மனிதன்
அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.
சூரா இப்ராஹீம் 14:34.