தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, February 28, 2015

கழிவறையில் துஆக்கள் ஓதலாமா?




டாய்லெட் செல்லும் போது ஓதுவதற்கு துஆ உள்ளது. அது போல் டாய்லெட் விட்டு வெளி வருவதற்கும் துஆ உள்ளது. அதே போல் உளு செய்வதற்கும் முடிப்பதற்கும் பிஸ்மில்லாஹ்வும் இன்ன பிற வாசகங்களும் உள்ளன, டாய்லெட் உளூ செய்யும் இடம்போன்றவை ஒரே இடத்தில இருக்கும் பட்சத்தில் பாத்ரூமிலே எல்லா துவாக்களையும் ஓதலாமா ?
முஹம்மத் ரிஸ்வான்

பதில்:
இயற்கைக் கடனை நிறைவேற்றுபவர் கழிப்பிடத்திற்கு வெளியே தான் துஆக்களை கூற வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்.        இவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கழிவறைக்குள் எக்காரியங்களைச் செய்யக்கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விவரித்துள்ளார்கள். கழிப்பிடத்திற்குள் துஆக்களைக் கூறக் கூடாது என்றால் இதையும் நபியவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் இது கூடாது என்று கூறியதாக எந்தச் செய்தியும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தவுடன் துஆ ஓதுவார்கள் என்று புகாரியில் இடம்பெற்ற செய்தி கூறுகின்றது.

6322حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ رواه البخاري

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழைந்தால் "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி'' என்று கூறுவார்கள்.

பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
புகாரி (6322)

எனவே ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைந்து கூற வேண்டியதைக் கூறிவிட்டு மலம் கழித்தால் அதில் தவறேதுமில்லை.

துஆக்களைக் கூற வேண்டும் என்றே நபிமொழி கூறுகின்றது. அவற்றைக் கழிப்பிடத்திற்கு உள்ளே அல்லது வெளியே கூறுவதில் எந்தத் தடையும் பிறப்பிக்கவில்லை.

கழிவறையில் இருப்பவர் எதையும் மொழியக் கூடாது என்று கூறுபவர்கள் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

555حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلًا مَرَّ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبُولُ فَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رواه مسلم

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது அவர்களைக் கடந்து சென்ற மனிதர் ஒருவர் சலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லவில்லை.
முஸ்லிம் (606)

கழிவறையில் இருக்கும் போது என்பதற்கும் மலம் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. 

சிறு நீர் கழித்துக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஸலாம் கூறவில்லை என்று தான் இந்த ஹதீஸ் கூறுகிறது. கழிவறையில் என்று கூறவில்லை. கழிவறைக்குள் நுழைந்தவுடன் ஓத வேண்டியதை ஓதி விட்டு அதன் பின்னர் மலஜலம் கழிப்பதற்கு இதில் எந்த்த் தடையும் இல்லை.