தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, May 16, 2018

Islamic_Whats_App_Status_Series_40

ரமளான் வருகிறது நான் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள்???!!!


ஒவ்வொரு ஆண்டும் நாம் ரமளான் மாதத்தை (இறைவன் நாட்டப்படி) அடைந்து கொள்வதற்கு முன்பாக வாட்ஸ்அப் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக மன்னிப்புக் கடிதம் ஒன்று பெரும்பாலான இஸ்லாமியர்கள் வாயிலாக பரப்பப்படுவதை பார்க்க முடிகிறது.

அதில் தாம் யாருக்கேனும் அநீதமாக செயல்பட்டு இருந்தால் மன்னித்து விடுங்கள். அடுத்த ரமளானில் நான் இருப்பேனா என்பது தெரியாது என்பன போன்ற வாசக அமைப்புகள் இடம்பெறுகின்றன.

எண்ணமும் செயல்பாடும் சரிபோன்று தோற்றம் அளித்தாலும் அவைகள் குறிப்பிட்ட ஒரு காலத்தில் மட்டும் பேணப்படுவதை வைத்துத்தான் நாம் மார்க்கத்தோடு இணைத்து சட்டம் பெற வேண்டி உள்ளது.

தாம் அநீதம் இழைத்ததாக உணரும் தருணமும், பிற மனிதர்களிடம் மன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஒரு முஃமினின் வாழ்வில் அனுதினமும் ஏற்பட வேண்டிய சிந்தனை ஆகும்.

மரண சிந்தனை எப்படி நம் வாழ்வில் அதிகம் அதிகம் உதிக்க வேண்டுமோ அதேபோன்று தாம் பிறருக்கு செய்த அநீதங்களோடு இவ்வுலகைவிட்டும் பிரிந்து விட்டால் மிகப்பெரிய இருள் சூழ்ந்த கைசேதத்தை மறுமையில் பெற வேண்டி வரும் என்ற சிந்தனையும் அன்றாடம் உதித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இதுபோன்று செயல்படும் நபர்களை காண்பது மிகவும் அரிது.

உம்ரா அல்லது ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது ரமளான் மாதத்தை அடைய நேரிட்டாலோ மாத்திரம் தான் இதுபோன்ற மன்னிப்புக் கடிதங்கள் அனைவரிடம் பரவிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக இது மார்க்க அடிப்படையில் தவறான வழிமுறை ஆகும்.

குறிப்பிட்ட நாளிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட மாதத்திலோ இதுபோன்று நாம் செய்ய வேண்டும் என்று இருக்குமாக இருந்தால் அதனை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் நமக்கு கற்றுக்கொடுத்து இருப்பார்கள். ஆனால் நபியவர்கள் ஹஜ் உம்ரா செய்யும்பொழுதோ அல்லது தாம் ரமளான் மாதத்தை சந்திக்கும்பொழுதோ யாரிடமும் மன்னிப்பு கேட்டு செல்லவில்லை. தம் தோழர்களை அவ்வாறு பணிக்கவும் இல்லை.

ரமளான் மாதம் என்பது ஏனைய மாதங்களை விட அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்படும் மாதம் ஆகும் என்று நபியவர்கள் சொன்னார்களா????

இஸ்லாத்தின் முக்கிய ஐந்து தூண்களில் இறுதியான கடமை ஹஜ் என்று நபியவர்கள் சொன்னார்கள். முஸ்லிமின் வாழ்விற்கே இறுதியான கடமை ஹஜ் தான் என்றா சொன்னார்கள்???

இதுபோன்று நம்மை அறியாமலேயே நாம் விளங்கிக்கொண்டதன் விளைவு தான் மிகவும் வயதான காலத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நிலையும் ரமளான் மாதம் வந்துவிட்டால் வாட்ஸ்அப் தகவல்களும் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

சில இடங்களில் மரண யாத்திரை என்ற கோணத்தில் ஹஜ் யாத்திரை பார்க்கப்படுகிறது. இதை காரணமாக வைத்துக் கொண்டு தான் நம் மக்கள் ஹஜ் செல்லும்பொழுது வீடு வீடாக சென்று தெரியப்படுத்தி மன்னிப்பு தேடிவிட்டு செல்கின்றனர்.

நாம் ஹஜ் சென்று திரும்பும்போது ஜனாஸாவாகத்தான் திரும்புவோம் என்று அல்லாஹ் நமக்கு ஏதேனும் அறிவித்துக் கொடுத்தானா?

ஹஜ் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிய மக்களை நாம் கண்களால் காணவே இல்லையா?

இல்லை இந்த ரமளானோடு நாம் இவ்வுலகைவிட்டு பிரிந்து விடுவோம் என்று அல்லாஹ் ஏதேனும் அறிவித்துக் கொடுத்தானா?

நாம் எப்பொழுது மரணமாகப் போகிறோம் என்பது நம்மை படைத்த இறைவனைத்தவிர வேறு எவருக்கும் தெரியாது. நிலைமை இவ்வாறு இருக்க நோன்பிற்கு நோன்பும், ஹஜ்ஜிற்கு ஹஜ்ஜும் மாத்திரம் பிற நபர்களிடம் மன்னிப்பு வேண்டி நின்றால் சரியா???

மரண சிந்தனையும் இறையச்சமும் நோன்பிற்கும் ஹஜ்ஜிற்கும் மட்டும் தான் வர வேண்டும் என்று கூற வருகிறோமா???

ஒவ்வொரு நாள் இரவிலும் நாம் உறங்கச் செல்லும் முன்னும் உறங்கி எழுந்த பின்னரும் ஓதுகிறோமே அந்த துஆவின் அர்த்தம் நம் உள்ளம்தொட்டு வெளியேறி இருக்குமானால் நிச்சயமாக நோன்புக்கு மட்டும் மன்னிப்புக் கடிதம் அனுப்பி வைக்கும் வழக்கத்தை நாம் கையாள மாட்டோம்.

நம் வாழ்வில் அதிகம் நாம் நினைவு படுத்தப்பட வேண்டியது மரண சிந்தனை ஆகும். அந்த மரண சிந்தனை எப்பொழுதெல்லாம் நமக்கு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் நாம் பிறருக்கு இழைத்த அநீதங்கள் நம் உள்ளத்தை அச்சத்தால் தட்டி எழுப்பும் உணர்வுகளாக இருக்க வேண்டும். நினைவுகள் உண்டாகும் அவ்வபொழுதே நாம் அதற்குண்டான பரிகாரங்களை செய்துவிட வேண்டும்.

ஹஜ்ஜையும் உம்ராவையும் வருடா வருடம் வரும் ரமளானையும் நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தால் அதில் பல மனிதர்கள் தோல்வியைத்தான் சந்திப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இறைவனது விஷயங்களில் எல்லை மீறுகின்ற பொழுது உடனுக்குடனே நாம் இஸ்திஃக்ஃபார் தேடுவதைப்போன்று, மனிதர்களுக்கு செய்யும் அநீதங்களுக்காகவும் இயன்றளவு சம்மந்தப்பட்டவர்களிடம் முறையிட்டு விரைந்து மன்னிப்பு தேடி விட வேண்டும்.

இதுபோன்ற சிந்தனைகள் நொடிப்பொழுதிலும் நம் வாழ்வில் உதிக்க வேண்டிய சிந்தனைகள் ஆகும். அதை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளுதல் என்பது தவறான வழிமுறை என்பதை புரிந்து இஸ்லாமிய சமூகம் செயல்பட வேண்டும்.