தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, March 6, 2018

அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைவனின் அழகிய திருநாமங்கள்)



இறைவனின் திருநாமம் கொண்டு துவங்குகிறேன்.....!

இறைவன் தமது திருநாமங்களாக அவனது வேதத்தில் பயன்படுத்தியிருக்கும் அஸ்மாவுல் ஹுஸ்னா (அழகிய திருநாமங்கள்) என்று அழைக்கப்படும் பெயர்கள் பற்றிய தகவல்களை தொகுப்பாக தொடர்ந்து வழங்கலாம் என்ற முயற்சியை துவங்கி உள்ளேன். எனது நோக்கத்தை வல்ல நாயன் அழகிய முறையில் நிறைவேற்றித்தரப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இறைவனை பெரும்பகுதி நாம் அல்லாஹ் என்ற பெயர்கூறியே அழைத்து வருகிறோம். இதேபோல இறைவனது அழகிய குணாதீசியங்களை பிரதிபலிக்கும் பெயர்களும் இறைவனுக்கு உண்டு. இறைவனது ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான குணங்களை வர்ணிக்கும் வகையில் அமைந்திருக்கும். இவை அனைத்தையும் ஒருவர் பொருளுணர்ந்து புரிந்து கொள்வாராக இருந்தால் நிச்சயமாக அவரது வாழ்வில் இறைவனைப்பற்றிய தாக்கம் அதிகரிக்கும். அதற்கேற்ப தமது வாழ்வில் சிறந்த மாறுதல்களும் உண்டாகும் (இறைவன் நாடினால்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல்: புஹாரி : 6410.

இறைவனது தொண்ணூற்று ஒன்பது பெயர்களையும் பொருளுணர்ந்து நம்பிக்கை கொண்டு மனனமிட்டவருக்கு இறைவன் சுவனத்தை தருவதாக வாக்களிக்கிறான் என்றால் பலனில்லாத ஒன்றுக்கு நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய நற்பாக்கியத்தை தர மாட்டான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாடசாலை மாணவனை போன்ற மனனமிடல் இல்லாமல் உளப்பூர்வமாக இறைவனது பண்புகளை புரிந்து உணர்ந்து மனனமிடுவோரையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள். இது முதலாவது அம்சம்.

இறைவன் கற்றுக்கொடுத்த இத்தகைய பெயர்களைக் கொண்டு அடியார்கள் தம்மிடம் பிரார்த்தனை செய்வதை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். திருக்குர்ஆன் (7:180)

சில சந்தர்பங்களில் இறைவனது ஏனைய பெயர்கள் கூறி அவனிடம் பிரார்த்தனை செய்வதென்பது மிகவும் ஏதுவானதாகவும் மன அமைதியைப் பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கும். இது எவ்வாறு என்பதனை இறைவனது பெயர்களை விவரங்களோடு நாம் அறிய முற்படும்பொழுது இலகுவாக விளங்கிக்கொள்ள இயலும் இன்ஷா அல்லாஹ்...!

இறைவனது பெயர்களை பயன்படுத்தி நாம் இறைவனை அழைத்துப் பிரார்த்தனை செய்வதை இறைவன் விரும்புவதைப்போல, இறைவனால் அறிவித்துத் தரப்படாத பெயர்களை நாமாக உண்டாக்கிக்கொண்டு இதுவும் இறைவனது பெயர்தான் என திரித்துக்கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வோர் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் அதே வசனத்தின் வாயிலாக சொல்கிறான்.

இன்றைக்கு சில கூட்டம் இறைவனது தண்டனைக்கு உரிய இதே செயல்பாட்டினை மிகச்சாதாரணமாக செய்து வருவதைப் பார்க்க முடிகிறது. இறைவனது பெயர்களை வகை வகையாக திரித்து பிரித்து திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் இறைவனது கோபத்தை தட்டுகின்றனர். இது தவறான வழிமுறை. எது அனுமதிக்கப்பட்டதோ அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனைய செயல்களில் உள்ள அதிகப்பிரசங்கித்தனம் மார்க்கத்திலும் இணைக்கப்ப்படுமாக இருந்தால் செல்லும் இடம் நரமாகிவிடும் என்பதில் எச்சரிக்கை வேண்டும். இவற்றையும் நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.

துவக்க உரைக்கான விளக்கமாக இந்த சிறிய விளக்க உரையை அமைத்து, எழுத்துக்களை நீட்டித்து விடாமல் இயன்றளவு சுருக்கமான விளக்கங்களை இறைவன் உள்ளத்தில் எழுப்பித்தர பிரார்த்தனை செய்து முடிக்கிறேன்.

எந்தவொரு நன்மையையும் நாம் இழிவாக கருதிவிடக் கூடாது. அனைத்து நன்மைகளிலும் நாம் முன்னின்று செயல்படுவதையே விரும்ப வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அத்தகைய உணர்வுகளை நம் அனைவருக்கும் தந்தருள்பாளிப்பானாக.....

(அடுத்ததடுத்த பதிவுகள் வாயிலாக இறைவனது பெயர்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்....)

Monday, March 5, 2018

அளவுகடந்த புகழ்ச்சி அழிவுப்பாதைக்கு வித்திடும்



தம்மோடு வாழும் சக தோழர்களை புகழ்ந்து பேசியே ஆக வேண்டும் எனில் அதற்கென்று நபியவர்கள் அழகிய வழிகாட்டலை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். புகழ் வல்ல இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது என்பது அடிப்படை. என்றாலும் இங்கு மனிதர்கள் சார்ந்த விஷயத்தில் கூட புகழ் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவதற்கான காரணம் தமிழில் இதனை தெளிவுபடுத்த வேறு வார்த்தை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

புரிந்து கொள்வதற்காகவே சக மனிதர்களை புகழ்தல் என்ற வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் நம் சிந்தனையில் "பிறரைப்பற்றிய நல்லவிதமான பேச்சுக்கள்" என்று புரிந்து கொண்டால் இலகுவாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "உமக்கு நாசம்தான்! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே" என்று பலமுறை கூறினார்கள்.

பிறகு, "உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், "இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்" என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்று
கூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.

அறிவிப்பவர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 5727.

மேற்கண்ட இந்த செய்தியில் நபிகளார் (ஸல்) அவர்கள் ஏராளமான தகவல்களை உள்ளடக்கி போதனை செய்துள்ளார்கள்.

முதலாவது அம்சம், தம்மோடு வாழும் சக மனிதர்களை எல்லை தாண்டி புகழ்ந்து பேசுவதால் நஷ்டம் இரு தரப்பினருக்கும் தான் என்பதை கூறுகிறார்கள்.

புகழ்ந்தவரை நோக்கி உமக்கு நாசம்தான் என்றும் புகழப்பட்டவரது கழுத்தை நீ துண்டித்துவிட்டாய் என்றும் கூறுகிறார்கள். இந்த வாசகத்தின் மூலம் புகழ்ச்சியினால் உண்டாகும் பாதிப்புக்கள் இரு தரப்பினருக்குமே தான் என்பதை மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். ஆகவே தம்மை ஒருவர் புகழ்வதில் எல்லை கடக்கிறார் எனில் கண்டும் காணாது நாம் இருந்து விடக்கூடாது. அதனுடைய பாதிப்பு நம்மையும் நாசத்தில் தள்ளிவிடும் என உணர்ந்துகொண்டு இதுபோன்று புகழ்பவர்களை இயன்றளவு வாயடைத்து இருக்கச் செய்துவிட முயற்ச்சிக்க வேண்டும். அதுவே நமக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித்தரும்.

இரண்டாவது அம்சம், தம்மோடு வாழும் நண்பரது அழகிய செயல்பாடுகளை பார்த்துவிட்டு புகழ்ந்தே ஆக வேண்டும் என்று உள்ளம் சொல்கிற நிலை இருந்தால் "நான் இன்ன மனிதரைப்பற்றி இவ்வாறு நல்ல விதமாய் எண்ணுகிறேன்", என்றாலும் அவரது செயல்பாடுகள் எத்தகையது என்பதை அல்லாஹ் ஒருவனே மிகத்தெளிவாக அறிந்தவன். நான் அதனை அறிய மாட்டேன்.

இறைவனது விசாரணையில் அவர்குறித்து நான் பேசிய வாசகங்கள் தவறானவையாகக்கூட மாறிப்போகலாம். காரணம் நான் வெளிப்படையாக அவரைப்பார்த்து புகழ்ந்து பேசும் செயல்பாடுகள் அவரது உள்ளத்தில் இஃக்லாஸ் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு இருக்குமேயானால் நிச்சயமாக அவை இறைவனால் அழிக்கப்பட்டுவிடும் என்ற அடிப்படையில்தான் அவரது புகழ் வார்த்தைகள்கூட அமைந்திருக்க வேண்டும் என்பதே நபியின் போதனை.

மூன்றாவது அம்சம், நாம் இவ்வாறெல்லாம் பிறரைப்பற்றி இஸ்லாம் கூறும் எல்லைகளோடு புகழும்பொழுது கூட, அதாவது இன்ன மனிதரைப்பற்றி நான் இவ்வாறு எண்ணுகிறேன் என்று சொல்லும் பொழுதுகூட நாம் சொல்கின்ற அவரது செயல்பாடுகள் அவரிடம் இருந்தால் மட்டுமே சொல்லப்பட வேண்டும். அவரிடம் இல்லாத ஒன்றை இணைத்து நாம் புகழ்ந்து விடக் கூடாது. அதாவது இவ்வாறு எண்ணுகிறேன் என்று சொல்லும் சாதாரண எண்ணுதலில் கூட அவரிடம் இல்லாத ஒரு செயலை இணைத்து இவ்வாறு எண்ணுகிறேன் என்று நாம் சொல்லக்கூடாது என்றும் நபிகளார் (ஸல்) அவர்கள் தடுக்கிறார்கள்.

இத்தனை வரம்புகளையும் பேணித்தான் நாம் நம்மோடு வாழும் சக மனிதர்களை புகழ வேண்டும். இவைகளை ஒரு நல்ல சிந்தனையுள்ள முஸ்லிம் சிந்திப்பாரெனில் கண்டிப்பாக நாம் ஏன் பிறரைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இறைவனிடம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்றே ஒதுங்குவார்.

மேலே சொல்லப்பட்ட வரம்புகள் பேணப்படும் வகையில் பிறரது நற்செயல்களைப் பற்றி பேசுதல் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். இறைவனை புகழ்கின்ற எல்லையை தொட்டுவிடாத அளவிற்கு இதனுள் நபியவர்களால் வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இவைகளை பேண இயலாத நபர்கள் வாய் மூடி இருந்துவிட்டு போவதே சிறந்தது ஆகும். 

எல்லைக்கடக்கும் பட்சத்தில் சிக்குண்டு தவிப்பவர்கள் நாமும், நம் நேசத்தை வெளிப்படுத்தும் விதமாக நம்மால் புகழப்பட்ட நம் தோழர்களும்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (உலக மோகத்திற்காக புகழும் அரசியல்வாதிகள் போன்றோரை நாம் இங்கு குறிப்பிடவில்லை)

இறைவன் விதித்த வரம்புகளை பேணி நடக்கும் நற்பாக்கியத்தை வல்ல இறைவன் நம் அனைவருக்கும் தந்தருல்பாளிப்பானாக....!

Islamic_Whats_App_Status_Series_23 (Pray_For_Syria)

Sunday, March 4, 2018

Tamil Translation 01

முஃமினது வாழ்வில் அனைத்து சந்தர்ப்பங்களும் நன்மையானவையே




ஒரு இறைவிசுவாசியை பொருத்தவரை ஏனைய நம்பிக்கை கொண்ட மக்களை போன்று சோதனைகளை ஒருபோதும் அணுகக்கூடாது. இறைவன் தம்மை நம்பிய மக்களுக்கு சோதனை இல்லாமல் சுவனம் தரப்போவதில்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை.

இதனை ஒரு இறை நம்பிக்கையாளன் தீர்க்கமாக புரிந்து இருந்தால் எந்தவொரு சோதனையும் நிச்சயமாக அவருக்கு சாதனையாக மாறிப்போகும். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட ஒரு சந்தர்ப்பத்தில் ஆச்சரியத்தோடு ஒரு செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
அறிவிப்பவர் : சுஹைப் (ரலி), நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5726.

ஒரு முஃமினுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும் நன்மையாகிறது. துன்பங்களும் நன்மையாகவே அமைந்து விடுகிறது. மகிழ்ச்சி நன்மையை பெற்றுத்தருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் பலரது உள்ளம் சோதனைகளை நன்மையாக எடுத்துக்கொள்வதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக சொன்னார்கள், சோதனைகளையும் நன்மைகளாக பொருந்திக்கொள்ளும் உள்ளம் முஃமினுக்கு மட்டுமே காணப்படும். அது அல்லாத நபர்களால் இவற்றை அடைந்து கொள்ள இயலாது. ஆகவே நாம் எந்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த இடத்தில் ஒருகணம் சிந்தனை செய்வோம்.

சோதனைகள் கூட ஒரு முஃமினுக்கு நன்மை பயக்கக்கூடியதாக எவ்வாறு அமைகிறது??? இதற்கான விளக்கத்தை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.
திருக்குர்ஆன் (2:155-157).

முஃமினது பண்பானது இழப்புக்கள் ஏற்படும்பொழுது இவ்வாறுதான் அமைந்திருக்கும் என்று இறைவன் கூறுகிறான். இந்த உலகத்தில் நாம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்துமே இறைவன் நமக்கு கொடுத்தவை. அவற்றில் சிலவற்றை இறைவன் நம்மை சோதிப்பதற்காக எடுத்தும் கொள்கிறான். நாம் விரும்புகின்ற பல அம்சங்களை நம்மை நெருங்க விடாமல் ஒதுக்கியும் வைத்து விடுகிறான்.

ஒன்றை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் தோழர்களே! நம்மை படைத்த இறைவன் இவ்வுலகத்தில் எவர்களைக் காட்டிலும் நம்மீது இரக்கமுள்ளவன் அன்பானவன். நமக்கு எது தேவை, எவை நம்மைவிட்டு நீங்கினால் நமது பாதைகள் தெளிவாகும், எது நமக்கு சிறந்தது, எது நமக்கு ஏற்புடையதல்ல என்பதனை நம்மைக்காட்டிலும் இறைவன் மிகத்தெளிவாக அறிந்தவன்.

நாம் நேசித்த ஒன்று நம்மை விட்டும் விலகிச் செல்கின்றதெனில் இது இறைவனது நாட்டப்படி அமைந்துள்ளது, இதன் மூலம் இறைவன் நமக்கு ஏதேனும் நன்மை பயக்கக்கூடும், இதன் மூலம் இறைவன் ஏதேனும் படிப்பினைத்தரக்கூடும், அல்லது இதைவிட சிறந்ததை இறைவன் தரக்கூடும் என்று நமது உள்ளங்களை பக்குவப்படுத்த வேண்டும். அவ்வாறு பக்குவப்படுத்துவோரே இறைநம்பிக்கையாளர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

இழப்பின்பொழுது மனமுவந்து "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று கூற வேண்டும். நாமே ஒருநாள் இறைவனால் அழைக்கப்பட்டுவிடுவோம் எனும்பொழுது நாம் நேசிக்கிற நாம் அனுபவிக்கிற இவைகளெல்லாம் எம்மாத்திரம்???!!! என்ற உணர்வு நிச்சயமாக நம் உள்ளத்தை சாந்தப்படுத்தும்.

அதோடு மாத்திரம் இறைவன் நிறுத்திக்கொள்ளாமல் இதுபோன்ற நேரங்களில் பொறுமையோடு சகித்து கொள்வோருக்கு சுவனம் என்ற சிறந்த நற்செய்தியை அறிவிக்கிறான். மனமுவந்து "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்ற வார்த்தைகளைக் கூறுவோர் தான் நேர்வழி பெற்றோர் என்றும், அவர்களுக்குத்தான் இறைவனின் அன்பும் அருளும் உண்டு என்றும் இறைவன் அறிவிக்கிறான்.

ஆக ஒரு முஃமின் தனது வாழ்வில் அவர் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களுமே நன்மையானவை தான். அவைகள் ஆழ்ந்த சோகங்களை தந்தாலும் இறைவனது அன்பையும் அருளையும் பெற்றுத்தரக்கூடியவை என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. கவலைகளால் உள்ளங்கள் கனத்திருந்தாலும் அவைகளை இயல்பு நிலைக்கு மாற்ற வல்ல நாயன் போதுமானவன். உள்ளங்களின் அதிபதி அவன் தான். துக்கங்களை மகிழ்வாக்க அவனால் மட்டுமே இயலும். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவனையே சார்ந்திருப்போமாக!!!

என் இறைவா! கவலைகளால் உள்ளங்கள் சோர்ந்து போவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்!!!