நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் ஒருவர் பார்வையற்றவருக்காக 40 அடிவரை வழிகாட்டுவாரோ அவருக்கு சுவர்க்கம்
வாஜிபாகிவிடும்.
மற்றொரு ரிவாயத்தில் அவருடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகிறது” என்றும்
இடம் பெறுகிறது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : தப்ரானி.
இந்த செய்தி ஹதீஸ் துறை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பலவீனமான
செய்தியாகும்.
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அலீ இப்னு உர்வா என்பவர்
பொய்யர் என விமர்சிக்கப்பட்டவர் ஆவார். மேலும் இவரோடு தொடர்பு படுத்தி வரும்
அறிவிப்பாளர் தொடர் சார்ந்த செய்திகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும்
விமர்சிக்கப்பட்டுள்ளது.
(ஸில்ஸிலத்துல் அஹாதீசுஸ் ளஈஃபா 139/10, ஷுஃபுல்
ஈமான் 96/10, மஜ்மவுஸ் ஸவாயித் வ மன்பவுஃப் ஃபவாயித் 138/3,
அல்ஜாமிவுஸ் ஸஃகீர் 12500, ஜாமிவுல் அஹாதீஸ் 111/21)
இறைவனது திருமுகத்தை நாடி நாம் செய்யும் எந்த நன்மையாக இருந்தாலும் அதற்கு
நிச்சயமாக இறைவனிடம் கூலி உண்டு. அந்த அடிப்படையில் ஒரு மனிதர் பார்வையற்ற
நபருக்காக உதவி செய்கிறார் என்றால் நிச்சயமாக இறைவன் நாடுகின்ற அளவு அவருக்கு கூலி
கொடுப்பான்.
தாகித்திருந்த ஒரு நாய்க்கு நீர் புகட்டிய காரணத்தால் விபச்சாரம் செய்து வந்த
பெண்ணிற்கு கூட இறைவனது மன்னிப்பு கிடைத்துள்ளது. ஆகவே இறைவனது திருமுகத்திற்காக
பிற உயிரினங்கள் மீது அன்பு காட்டுதல் கூட நமது பாவங்கள் மன்னிக்கப்பட அல்லது
நம்மை சுவனத்திற்கு அழைத்துச்செல்ல போதுமானதாக இருக்கலாம். ஆனால் அதை இறைவன் தான்
தீர்மானிப்பான்.
அதேபோன்று தான் பார்வையற்ற மனிதர்கள் மீது இறக்கம் செலுத்தி உதவுதலுக்கும்
இறைவன் நாடினால் சுவனம் தரலாம். அதை நாம் உறுதிபட சொல்ல முடியாது.
ஆனால் நாம் மேலே சுட்டிக்காட்டிய செய்தி பார்வையற்ற நபர்களுக்கு உதவி
செய்வதால் இறைவனது மன்னிப்பும் சுவனமும் கிடைக்கும் என்பதை உறுதிப்பட சொல்வதைப்
போன்று வருகிறது. இது பலவீனமான செய்தி என்பதால் இந்த செய்தியை நம்பி நாம் அமல்
செய்ய இயலாது.