தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Sunday, March 4, 2018

முஃமினது வாழ்வில் அனைத்து சந்தர்ப்பங்களும் நன்மையானவையே




ஒரு இறைவிசுவாசியை பொருத்தவரை ஏனைய நம்பிக்கை கொண்ட மக்களை போன்று சோதனைகளை ஒருபோதும் அணுகக்கூடாது. இறைவன் தம்மை நம்பிய மக்களுக்கு சோதனை இல்லாமல் சுவனம் தரப்போவதில்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை.

இதனை ஒரு இறை நம்பிக்கையாளன் தீர்க்கமாக புரிந்து இருந்தால் எந்தவொரு சோதனையும் நிச்சயமாக அவருக்கு சாதனையாக மாறிப்போகும். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட ஒரு சந்தர்ப்பத்தில் ஆச்சரியத்தோடு ஒரு செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
அறிவிப்பவர் : சுஹைப் (ரலி), நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5726.

ஒரு முஃமினுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும் நன்மையாகிறது. துன்பங்களும் நன்மையாகவே அமைந்து விடுகிறது. மகிழ்ச்சி நன்மையை பெற்றுத்தருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் பலரது உள்ளம் சோதனைகளை நன்மையாக எடுத்துக்கொள்வதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக சொன்னார்கள், சோதனைகளையும் நன்மைகளாக பொருந்திக்கொள்ளும் உள்ளம் முஃமினுக்கு மட்டுமே காணப்படும். அது அல்லாத நபர்களால் இவற்றை அடைந்து கொள்ள இயலாது. ஆகவே நாம் எந்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த இடத்தில் ஒருகணம் சிந்தனை செய்வோம்.

சோதனைகள் கூட ஒரு முஃமினுக்கு நன்மை பயக்கக்கூடியதாக எவ்வாறு அமைகிறது??? இதற்கான விளக்கத்தை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.
திருக்குர்ஆன் (2:155-157).

முஃமினது பண்பானது இழப்புக்கள் ஏற்படும்பொழுது இவ்வாறுதான் அமைந்திருக்கும் என்று இறைவன் கூறுகிறான். இந்த உலகத்தில் நாம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்துமே இறைவன் நமக்கு கொடுத்தவை. அவற்றில் சிலவற்றை இறைவன் நம்மை சோதிப்பதற்காக எடுத்தும் கொள்கிறான். நாம் விரும்புகின்ற பல அம்சங்களை நம்மை நெருங்க விடாமல் ஒதுக்கியும் வைத்து விடுகிறான்.

ஒன்றை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் தோழர்களே! நம்மை படைத்த இறைவன் இவ்வுலகத்தில் எவர்களைக் காட்டிலும் நம்மீது இரக்கமுள்ளவன் அன்பானவன். நமக்கு எது தேவை, எவை நம்மைவிட்டு நீங்கினால் நமது பாதைகள் தெளிவாகும், எது நமக்கு சிறந்தது, எது நமக்கு ஏற்புடையதல்ல என்பதனை நம்மைக்காட்டிலும் இறைவன் மிகத்தெளிவாக அறிந்தவன்.

நாம் நேசித்த ஒன்று நம்மை விட்டும் விலகிச் செல்கின்றதெனில் இது இறைவனது நாட்டப்படி அமைந்துள்ளது, இதன் மூலம் இறைவன் நமக்கு ஏதேனும் நன்மை பயக்கக்கூடும், இதன் மூலம் இறைவன் ஏதேனும் படிப்பினைத்தரக்கூடும், அல்லது இதைவிட சிறந்ததை இறைவன் தரக்கூடும் என்று நமது உள்ளங்களை பக்குவப்படுத்த வேண்டும். அவ்வாறு பக்குவப்படுத்துவோரே இறைநம்பிக்கையாளர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

இழப்பின்பொழுது மனமுவந்து "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று கூற வேண்டும். நாமே ஒருநாள் இறைவனால் அழைக்கப்பட்டுவிடுவோம் எனும்பொழுது நாம் நேசிக்கிற நாம் அனுபவிக்கிற இவைகளெல்லாம் எம்மாத்திரம்???!!! என்ற உணர்வு நிச்சயமாக நம் உள்ளத்தை சாந்தப்படுத்தும்.

அதோடு மாத்திரம் இறைவன் நிறுத்திக்கொள்ளாமல் இதுபோன்ற நேரங்களில் பொறுமையோடு சகித்து கொள்வோருக்கு சுவனம் என்ற சிறந்த நற்செய்தியை அறிவிக்கிறான். மனமுவந்து "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்ற வார்த்தைகளைக் கூறுவோர் தான் நேர்வழி பெற்றோர் என்றும், அவர்களுக்குத்தான் இறைவனின் அன்பும் அருளும் உண்டு என்றும் இறைவன் அறிவிக்கிறான்.

ஆக ஒரு முஃமின் தனது வாழ்வில் அவர் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களுமே நன்மையானவை தான். அவைகள் ஆழ்ந்த சோகங்களை தந்தாலும் இறைவனது அன்பையும் அருளையும் பெற்றுத்தரக்கூடியவை என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. கவலைகளால் உள்ளங்கள் கனத்திருந்தாலும் அவைகளை இயல்பு நிலைக்கு மாற்ற வல்ல நாயன் போதுமானவன். உள்ளங்களின் அதிபதி அவன் தான். துக்கங்களை மகிழ்வாக்க அவனால் மட்டுமே இயலும். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவனையே சார்ந்திருப்போமாக!!!

என் இறைவா! கவலைகளால் உள்ளங்கள் சோர்ந்து போவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்!!!

Wednesday, February 28, 2018

சிரிய தேச எம் சொந்தங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்



ஒவ்வொரு கால சூழலிலும் ஏதாவதொரு மூலைகளில் இஸ்லாமிய உறவுகள் மதச்சாயம் பூசப்பட்டு அழிக்கப்படும் நிகழ்வுகள் சதாவும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. தற்போதைய சூழலில் கூட எம் சிரிய தேசத்து உறவுகள் அநியாயமான முறையில் கொன்றொழிக்கப்படும் நிகழ்வுகளை நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.

இரட்டை வேடமிடும் மீடியாக்கள் மூலமாக இதுபோன்ற அநியாயமான நிகழ்வுகள் உலகிற்கு காட்டப்படாமல் மறைக்கப்பட்டாலும் இறைவன் அவற்றை நமக்கு வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறான்.

ஒன்றும் அறியா பச்சிளம் சிறார்கள் கொடூர அணு ஆயுதங்களுக்கு இறையாக சிதரிக்கிடப்பதை பார்க்கின்றபொழுது கற்பாறை உள்ளங்கள் கூட கனிந்து ஓடும் அளவிற்கு கவலையால் உள்ளம் பாதிப்படைகிறது. இதுபோன்ற சூழலை ஒரு இறை விசுவாசி எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிலரது பதிவுகளை பார்க்கும்பொழுது இறைவன் இவை அனைத்தையும் கண்டும் காணமல் இருப்பது போன்றும் நம் மக்கள்தான் இறைவனுக்கு இவைகளை நினைப்பூட்டுவதைப் போன்றும் அமைந்திருப்பதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

முதல் அடிப்படையை இஸ்லாமிய சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு முஃமினை பொறுத்தவரையில் தம் வாழ்வில் பல்வேறு வகையான சோதனைகளை சந்தித்துத்தான் இவ்வுலகில் வாழ முடியும். இவை இறைவனது வழிமுறையால் விதியாக்கப்படவை ஆகும்.

சுகபோக வாழ்வோடுதான் நம் வாழ்க்கை நிறைவுபெற வேண்டும் என்று நாம் சிந்திப்போமாக இருந்தால் ஒன்றோ தவறான சிந்தனை என்பதை உணர்ந்து அதற்கேற்ப நம் வாழ்வை பக்குவப்படுத்த வேண்டும். அல்லது நம் வாழ்வு ஈமானியப்பாதைகளில் இருந்து தடம்புரள வேண்டும். நமது உயிர் பிரிந்து செல்லும் வரை ஈமானுக்கும் நமக்கும் உண்டான சோதனை போர்கள் தொடந்து கொண்டே தான் இருக்கும் என்பதை முதன்மை அடிப்படையாக ஆழப்பதியவைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக இதுபோன்ற அநியாயமான நிகழ்வுகளின் பொழுதெல்லாம் கீழ்கண்ட இறைவனது வார்த்தைகள் தான் நமது சிந்தனையின் உச்சத்தைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணிவிடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே1 அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.
(அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோராக தறிகெட்டு ஓடுவார்கள். (நிலைகுத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது. அவர்களின் உள்ளங்களும் செயலற்று விடும்.
மனிதர்களை வேதனைப்படுத்தும் நாளைப்  பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) "எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்'' என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். எங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன் நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் குடியிருப்புகளில் நீங்களும் குடியிருந்தீர்கள். அவர்களை எவ்வாறு நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பல (முன்) உதாரணங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறினோம். (என்று அவர்களுக்குக் கூறப்படும்)
அவர்கள் கடும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின் சூழ்ச்சி மலைகளைப் புரட்டுவதாக இருந்தபோதும் அந்த சூழ்ச்சி (வெல்வது) அல்லாஹ்விடமே உள்ளது.
தனது தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியை அல்லாஹ் மீறுபவன் என்று நீர் எண்ணாதீர்! அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.
அந்நாளில்  பூமி, வேறு பூமியாகவும், வானங்களும்  (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும்.  ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
அந்நாளில்  குற்றவாளிகள் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருப்பதை நீர் காண்பீர்!
அவர்களின் சட்டைகள் தாரினால் தயாரிக்கப்பட்டவை. அவர்களின் முகங்களை நெருப்பு மூடிக் கொள்ளும்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்பட்டதற்கேற்ப அல்லாஹ் கூலி கொடுப்பான். அல்லாஹ் விரைவாக விசாரிப்பவன்.
இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும்.  இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.) திருக்குர்ஆன் (14: 42 - 52)
இறைவனது வார்த்தைகளோ வாக்குறுதிகளோ பொய்யானவை அல்ல. அதை ஏற்றுக்கொண்ட ஒரு முஃமினுடைய நாவோ உள்ளமோ இதற்கு மாற்றமாக ஒருபோதும் செயல்படாது சிந்திக்காது.
அநீதிகள் எங்கு நிகழ்ந்தாலும் அவற்றை இறைவன் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான். அநீதம் இழைக்கப்பட்டோரின் உள்ளங்கள் குளிர்ந்துபோகும் அளவிற்கு அநீதம் இழைத்த குற்றவாளிகளை இறைவன் தண்டிக்கவும் செய்வான். ஆனால் மனிதனின் அவசர சிந்தனைகளை இறைவன் கொண்டிருந்தால் என்றோ உலகம் அழிந்துபோய் இருக்கும். அனைத்திலும் இறைவன் அவகாசம் எடுத்து செயல்படுத்தக்கூடியவன்.
இந்த அநீதங்கள் குறித்து அவைகள் நடந்தேறும் பொழுது என்ன உணர்வலைகள் உள்ளத்தை அடைந்திருந்ததோ அதே உணர்வுகளோடு இறைவன் விசாரித்து நியாய தீர்ப்பு வழங்கும் நாள் ஒன்று உள்ளது. அந்த நாளுக்காகவே தாம் இவற்றை எல்லாம் தாமதப்படுத்துவதாக இறைவன் நமக்கு போதனை செய்கிறான். அந்த தீர்ப்புநாளை சந்திக்கும் வரை நாமும் சில விஷயங்களில் பொறுமை காக்கவே வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் எமது இஸ்லாமிய உறவுகள் எத்தகைய சோதனைகளில் சிக்கித் தவித்தாலும் அவர்களுக்காக நாம் ரப்பிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. தம் சகோதர முஸ்லிமின் சோதனை நீங்குவதற்காக நாம் கேட்கும் பிரார்த்தனை என்பது மிகச் சிறப்பான நன்மைகளை நமக்கு பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகும். அந்தப் பிரார்த்தனை உளத்தூய்மையோடு அமைந்துவிடுமாக இருந்தால் நிச்சயமாக இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்பதையும் நாம் நபியவர்கள் கற்றுத்தந்த ஒரு பொன்மொழி மூலமாக விளங்கிக்கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒருவர் தமது சகோதர முஸ்லிமிற்காக தனிமையில் அமர்ந்து பிரார்த்திக்கிறாரோ அவருக்காக ஒரு வானவர் "உமக்கும் அவ்வாறு உண்டாகட்டுமாக" என்று பிரார்த்திக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), நூல் : முஸ்லிம் 2732 (அரபு இலக்க எண்).

வானவர்களை பொறுத்தவரை இறைவனது அனுமதி இல்லாமல் எந்த ஒரு வேலையையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்யவும் அவர்களால் இயலாது. மேற்கண்ட ஹதீஸை கவணியுங்கள். நாம் பிறருக்காக தனிமையில் பிரார்த்தனை செய்யும்போது வானவர் அனுப்பி வைக்கப்படுகிறார் என்றால் அந்த வானவர் இறைவனால் அனுப்பி வைக்கப்படுகிறார் என்பதை முதல் பகுதியாக விளங்க வேண்டும்.
இரண்டாவது பகுதி, இறைவன் வானவர்களை அனுப்பி வைக்கிறான் என்றால் நாம் பிறருக்காக கேட்கும் பிரார்த்தனை என்ற சமூக உணர்வை இறைவன் உயர்வாக கருதுகிறான் என்பதாகும்.

மூன்றாவது பகுதி, இவ்வாறு பிரார்த்திப்போருக்கு அந்த வானவர் உமக்கும் அதுபோன்று உண்டாவதாக என பிரார்த்தனை செய்வதின் மூலம் இறைவன் அந்த நபருக்கு உதவுவதற்காக உத்தரவாதம் கொடுத்துவிட்டான் என்பதாகும். ஏனெனில் ஒரு வானவரின் பிரார்த்தனை என்பது இறைவனின் கட்டளை மூலம் வெளிப்படுவதாகும். இறைவன் நிச்சயமாக இந்த செயல் உடையோருக்கு உதவப்போகிறான் என்பதனால்தான் தமது அடியார்களான வானவர்களிடம் இந்த நபருக்காக இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று கட்டளையிட்டு அனுப்பி வைக்கிறான்.

இந்த சிறப்பான அம்சங்களை ஒரு இறைவிசுவாசி முறையாக விளங்கிக்கொண்டால் பிறரின் சுமைகளை தமதாக எண்ணி அவருக்காக பிரார்த்தனை செய்வதை ஒருபோதும் அவர் கைவிடமாட்டார். அவ்வாறு ஒரு இறைவிசுவாசி செயல்படுவதின்மூலம், நாம் யாருக்காக பிரார்த்தனை செய்தோமோ அவரைப்போன்ற சோதனைகள் இறைவன் நாடி நாளை நமக்கு ஏற்படும்போது, வானவர் நமக்காக கேட்ட பிரார்த்தனையின் மூலம் இறைவனது உதவி அப்போது நமக்கு கிடைக்கும்.
இன்று சிரிய தேசத்து மக்கள் அனுபவிக்கும் சோதனை நாளை நமக்கும் வரலாம். அந்த சந்தர்ப்பத்தில் இறைவனது உதவி நமக்கு மிக அவசியமான ஒன்றாகும். ஆகவே அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய மறவாதீர்கள் அவை நமக்கும் பலன்தரும் ஒன்றாகும்.
இச்சிறிய உபதேசத்தை கனத்த உள்ளத்தோடு முதலில் தமக்குரியதாக்கி நிறைவு செய்கிறேன்....!

Monday, December 4, 2017

மந்திரிக்கும் நபரை மனம் மாறவைத்த இன்னல்ஹம்தலில்லாஹ்......!!!



ஒவ்வொரு பயான்களின் துவக்கத்திலும் நாம் கேட்டு வரும் அழகிய வாசகங்கள்

«إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ»

முஷ்ரிக்காக வாழ்ந்த மந்திரிப்பவன் ஒருவனின் நேர்வழிக்கு வித்திட்டதை கீழே உள்ள நபியின் காலத்தில் நடந்த செய்தியின் மூலம் நாம் அறியலாம்.

அன்றாடம் கேள்விப்படும் வாசகங்கள், அன்றாடம் பேசுகின்ற வாசகங்கள்!!!! நபிக்கு பைத்தியம் என்று மக்கத்து முஷ்ரிக்குகள் பரப்பிவிட, ளிமாத் பின் ஸஅலபா என்ற மந்திரிப்பவன் நபியின் பைத்தியத்தை நீக்க சென்று அவனுக்கு நடந்த எதிர்பாராத நிலையை கவணியுங்கள்.

"அஸ்து ஷனூஆ" எனும் குலத்தைச் சேர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்றுகறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் "முஹம்மத் ஒரு மனநோயாளி" என்று கூறுவதை அவர் செவியுற்றார். "நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்" என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, "முஹம்மதே! காற்றுகறுப்புக்காக நான் ஓதிப்பார்த்துவருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?" என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இறைவாழ்த்துக்குப் பின்!" என்று கூறினார்கள்.

(
இதைக் கேட்ட) ளிமாத், "நீங்கள் (இப்போது) சொன்ன இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை முன்பு போன்றே மூன்று முறை கூறினார்கள். இதைக் கேட்ட ளிமாத், "நான் சோதிடர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள். அப்போது "உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!" என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் "என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கிறேன்)" என்று கூறினார்.

பிறகு (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிய படைப் பிரிவொன்று அவருடைய சமூகத்தாரைக் கடந்து சென்றது. அப்போது அப்படையின் தலைவர் தம் வீரர்களிடம், "இதோ இந்த மக்களிடமிருந்து (போர்ச் செல்வமாக) எதையேனும் பெற்றீர்களா?" என்று கேட்டார். படைவீரர்களில் ஒருவர், "(ஆம்) நான் ஒரு தண்ணீர் குவளையை அவர்களிடமிருந்து பெற்றேன்" என்றார். அதற்கு "அதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்! இவர்கள் ளிமாதின் சமூக மக்கள். (ளிமாத் அளித்துள்ள உறுதிமொழியின் கீழ் இவர்கள் அபயம் பெற்றவர்கள்)" என்று கூறினார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : ஸஹீஹ் முஸ்லிம் தமிழ் இலக்கம் 1576, அரபு இலக்கம்  868.

இதுபோன்ற செய்திகளை படிக்கும்போது நமக்கு தோன்றுவதெல்லாம் மார்க்க விஷயங்களை அறிந்த எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் இறைவன் நாடினால் மட்டுமே நேர்வழி!!!!

எத்துனை அறிவுப்பூர்வமான ஆதாரங்களை அள்ளி வீசினாலும் ஈமானின் சுவடுகூட படியாத உள்ளங்களும் உண்டு. வெறும் இன்னல்ஹம்துலில்லாஹ் என்று ஆரம்பிக்கும் வாசகம் கேட்டு ஈமானின் பக்கம் மீண்டுக்கொண்ட உள்ளங்களும் உண்டு!!! அனைத்தின் அதிகாரமும் அல்லாஹ் ஒருவனின் கரத்தில் என்பதே நிதர்சனம்.
இஸ்லாமிய கொள்கைகளை எத்தி வைக்கும் இடத்தில் "நாம் தான், நம்மால் தான், நாம் இல்லை என்றால்" என்பன போன்ற சகட்டுப்பெருமைகள் தோன்றுமாக இருந்தால், நமது எதார்த்த நிலை என்ன என்பதை செவிட்டில் அடித்தாற்போல உணர்த்தும் செய்திதான் நபியின் காலத்தில் நடந்த இந்த நெகிழ்வூட்டும் சம்பவம்.
நபியின் தந்தையின் சகோதரர் அபூதாலிப், மக்காவின் ஆரம்ப கட்டத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபிக்கு உறுதுணையாக நின்று உதவிய மனிதர். அபூதாலிப் அவர்களின் உள்ளம் இஸ்லாத்தின்பால் திரும்ப வேண்டும் என்பதற்காக அவரது மரண வேளையில் நபியவர்கள் ஏகத்துவக்கொள்கையை கண்ணீர்மல்க எடுத்துரைத்தும் அவர் இஸ்லாமை ஏற்காமல் மரணித்துப்போனதும், அபூபக்கர் (ரலி) அவர்களின் வயது முதிர்ந்த தந்தை அபூகுஹாபா அவர்களுக்கு நபியவர்கள் சில நிமிடங்கள் இஸ்லாத்தை அறிமுகம் செய்ய அதே இடத்தில் அவர் இஸ்லாத்தை ஏற்றமையும் நமக்கு எதை உணர்த்துகிறதோ அதை நோக்கியே அழைப்பாளர்கள் உள்ளத்தை பக்குவப்படுத்த வேண்டும்.

ஈமானிய மாற்றங்கள் இறைவனால் மட்டுமே!!!! எந்த தலைசிறந்த அழைப்பாலராலும் கிடையாது!!! இன்னல்ஹம்தலில்லாஹ் என்று ஆரம்பிக்கும் வாசகத்தால் கூட இறைவன் நாடினால் நேர்வழி கிடைக்கும்!!!! புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே உரித்தாகட்டுமாக!!!

Tuesday, November 28, 2017

சகோதர முஸ்லிமிற்காக பிரார்த்தனை செய்வதால் இறைவன் தரும் அளப்பரிய நன்மை என்னவென உங்களுக்கு தெரியுமா????



நமது வாழ்வின் எந்தப்பகுதியை நாம் எடுத்துக் கொண்டாலும் "நேரமின்மை" என்றதொரு தோழன் நம்மை இடைவிடாமல் துரத்திக்கொண்டு இருப்பதை நாம் உணர முடியும். உண்மையாகவே அதிகமான ஒய்வு நேரம் கிடைக்காத நபர்களும் இவ்வுலகில் உண்டு, நேரம் கிடைத்தும் கூட எதற்குமே நேரம் ஒதுக்க மனமில்லா நபர்களும் இவ்வுலகில் உண்டு.

இன்றைய நமது வாழ்க்கையின் பொருளடக்கத்தை சுருக்கமான வார்த்தைகளில் கூற வேண்டும் எனில், "நாம் (நாம், மனைவி, பிள்ளைகள்) வாழ வேண்டும்!!! நாம் (நாம், மனைவி, பிள்ளைகள்) வாழ்வதற்கு இவ்வுலகில் என்ன வேண்டும்!!! என்று சொல்லி முடித்துவிடலாம். இவ்வுலகில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது சதவீதமான மக்கள் இவ்வாறு தான் வாழ்கின்றனர்.

சமீபத்தில் சென்னையை கதிகலங்க செய்த வெள்ளப்பெருக்கு நிகழ்வை நாம் மறக்க முடியாது. இந்த வெள்ளப்பெருக்கு தொடர்பாக மீடியாக்களில் நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்தை பார்க்கும் சந்தர்ப்பத்தில் ஒரு ஆசிரியர் அழகாக மனிதனின் இன்றைய சூழலை வாழைப்பழத்தில் ஊசி ஏற்ரினார்போல சுட்டிக்காட்டினார். வெள்ளப்பெருக்கினால் வீட்டை விட்டு வெளியேற முடியாது தவித்த மக்கள் தமது வீட்டின் மாடியில் நின்று கொண்டு தமது அண்டை வீட்டாரை பார்த்து சொன்னார்களாம் ஹாய்! நீங்க இந்த வீட்லதான் இருக்கீங்களா??? என்று. அவர் நையாண்டியாக எடுத்து வைத்த இந்த வாதம் அருமை!!!

இதை ஏன் அவர் சொன்னார் என்பதை விளங்கி இருப்பீர்கள். அண்டை வீட்டில் வசிப்போர் யார் என்று கூட தெரியாத நிலையில் தான் இன்றைய மனித சமூகம் உருவாகிக்கொண்டு வருகிறது. இதற்கெல்லாம் கூறப்படும் காரணம் நேரமின்மை!!! மனித உணர்வுகளை மதித்தல், மனிதர்களோடு மனிதர்களாய் அன்பு காட்டி வாழுதல் போன்ற மனிதாபிமான செயல்கூட மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. மனிதாபிமான செயல்கள், சகோதரத்துவ உணர்வுகளுக்கு இஸ்லாம் கொடுக்கும் இடம் என்பது மிக உயர்வானது ஆகும்.

இவைகளை நான் ஆரம்பமாக கூறக் காரணம், இதுபோன்று நாம் பலவீனப்பட்டு இருக்கும் ஒரு முக்கியமான இடம் தான் தம்மோடு வாழும் சகோதர முஸ்லிமின் துன்பங்கள் சோதனைகளில் பங்கெடுக்காமை என்ற மோசமான இடம் ஆகும். சோதனைகளில் பங்கெடுக்காமை என்ற நிலை என்பதோடு பிறரது சோதனைகளை கண்டு மகிழும் இரக்கமற்ற குணமும் சேர்ந்தே பலரிடம் வளர்ந்து வருகிறது. மக்காவில் வசித்த முஷ்ரிக்குகள் மற்றும் மதினாவில் வசித்த முனாஃபிக்குகளின் குணமும் இதுவாகத்தான் இருந்தது. ஒரு முஸ்லிமின் துன்பம் அவர்களுக்கு இன்பமாகவே இருந்தது. நாம் எந்நிலையில் இருக்கிறோம் என்பதை சற்றே சிந்தித்து பார்ப்போமாக!!!!

தம்மோடு வாழும் ஒரு முஸ்லிம் ஏதேனும் சோதனையில் சிக்கினால் அவருக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற சகோதரத்துவ உணர்வை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்தார்கள். இதுபோன்ற உணர்வு நம்மில் எத்தனை நபர்களிடம் உள்ளது???? ஒரு முஸ்லிம் தமது சோதனைகளை கண்ணீர்மல்க நம்மிடம் கூறிவிட்டு ரப்பிடம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னால் நமது நிலை அந்த இடத்தில் கூட நேரமின்மையாகவே உள்ளது!!!

தாமாக பிரார்த்தனை செய்வதும் இல்லை! தம்மிடம் நெருங்கிப்பழகும் உறவுகள் தமது சோதனைகளை ஒப்புவித்து இறைவனிடம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று வாய் திறந்து கூறினாலும் கூட அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய நேரமுமில்லை!!! நமக்காக பிரார்த்தனை செய்யவே நேரமின்மை என்ற வியாதி நம்மை தொற்றிக்கொண்டிருக்கும்போது பிறரை எவ்வாறு நாம் கவணத்தில் எடுப்பது. இது மிகப்பெரிய பலவீனமான நிலை தோழர்களே! நமது நிலை மாற வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒருவர் தமது சகோதர முஸ்லிமிற்காக தனிமையில் அமர்ந்து பிரார்த்திக்கிறாரோ அவருக்காக ஒரு வானவர் "உமக்கும் அவ்வாறு உண்டாகட்டுமாக" என்று பிரார்த்திக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), நூல் : முஸ்லிம் 2732 (அரபு இலக்க எண்).

வானவர்களை பொறுத்தவரை இறைவனது அனுமதி இல்லாமல் எந்த ஒரு வேலையையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்யவும் அவர்களால் இயலாது. மேற்கண்ட ஹதீஸை கவணியுங்கள். நாம் பிறருக்காக தனிமையில் பிரார்த்தனை செய்யும்போது வானவர் அனுப்பி வைக்கப்படுகிறார் என்றால் அந்த வானவர் இறைவனால் அனுப்பி வைக்கப்படுகிறார் என்பதை முதல் பகுதியாக விளங்க வேண்டும்.

இரண்டாவது பகுதி, இறைவன் வானவர்களை அனுப்பி வைக்கிறான் என்றால் நாம் பிறருக்காக கேட்கும் பிரார்த்தனை என்ற சமூக உணர்வை இறைவன் உயர்வாக கருதுகிறான் என்பதாகும்.

மூன்றாவது பகுதி, இவ்வாறு பிரார்த்திப்போருக்கு அந்த வானவர் உமக்கும் அதுபோன்று உண்டாவதாக என பிரார்த்தனை செய்வதின் மூலம் இறைவன் அந்த நபருக்கு உதவுவதற்காக உத்தரவாதம் கொடுத்துவிட்டான் என்பதாகும். ஏனெனில் ஒரு வானவரின் பிரார்த்தனை என்பது இறைவனின் கட்டளை மூலம் வெளிப்படுவதாகும். இறைவன் நிச்சயமாக இந்த செயல் உடையோருக்கு உதவப்போகிறான் என்பதனால்தான் தமது அடியார்களான வானவர்களிடம் இந்த நபருக்காக இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று கட்டளையிட்டு அனுப்பி வைக்கிறான்.

இந்த சிறப்பான அம்சங்களை ஒரு இறைவிசுவாசி முறையாக விளங்கிக்கொண்டால் பிறரின் சுமைகளை தமதாக எண்ணி அவருக்காக பிரார்த்தனை செய்வதை ஒருபோதும் அவர் கைவிடமாட்டார். அவ்வாறு ஒரு இறைவிசுவாசி செயல்படுவதின்மூலம், நாம் யாருக்காக பிரார்த்தனை செய்தோமோ அவரைப்போன்ற சோதனைகள் இறைவன் நாடி நாளை நமக்கு ஏற்படும்போது, வானவர் நமக்காக கேட்ட பிரார்த்தனையின் மூலம் இறைவனது உதவி அப்போது நமக்கு கிடைக்கும். இதைவிட வேறு என்ன தேவை சொந்தங்களே!!!

பிற சகோதர முஸ்லிமின் சோதனையை கண்டு மகிழும் இறைவன் வெறுக்கும் குணம் நமது வாழ்வில் வந்துவிடக்கூடாது. நாம் நமது சோதனை நேரங்களை எவ்வாறு உணர்கிறோமோ அதுபோன்று பிற முஸ்லிம்களின் சோதனைகளை உணர்வோமாக!!!! எல்லாம் வல்ல இறைவன் சகோதரதத்துவ உணர்வுகளை நம் உள்ளத்தில் அதிகரிக்கச் செய்வானாக!!!! பிறரின் சோதனை கண்டு கண்ணீர் வடிக்கும் உயரிய குணத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்பாலிப்பானாக!!!

(இன்னும் ஏராளம் இது தொடர்பாக பேச வேண்டியுள்ளது. பதிவு நீழ்வதால் சுருக்கி முடிக்கிறேன்)

Saturday, November 25, 2017

நெருக்கமான உறவுகளின் மரணத்தின்போது நபியவர்கள் கற்றுக்கொடுத்த ஈமானிய பாடம்!!!



நாம் நேசிக்கும் நெருக்கமான உறவுகள் இவ்வுலகைவிட்டு பிரியும்போது அதன் சோகத்தையும் அதனால் உள்ளம் அனுபவிக்கும் வேதனைகளையும் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.

என்றாலும் ஒரு இறைவிசுவாசி இதுபோன்ற சூழலில் எவ்வாறு மனதை ஈமானியப் பண்புகளால் பக்குவப்படுத்த வேண்டும் என்பதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலமாக நமக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.

நபியவர்களின் பேத்தியின் மரண வேளையில் நபிகளார் (ஸல்) அவர்கள் தம் மகள் ஜைனபுக்கு கற்றுக்கொடுத்த ஈமானிய பாடத்தை கேளுங்கள்....

மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி(ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்(ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி(ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, 'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!' என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅபு, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர். 
சென்ற) நபி(ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள்.. இற்றுப்போன பழைய தோற் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என ஸஅத்(ரலி) கேட்டதற்கு நபி(ஸல்), 'இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள். அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஸைத் (ரலி), நூல் : புகாரி 1284.

மனதளவில் ஆழமான வேதனைகள் சூழ்ந்திருந்தாலும் இவை இறைவனது நியதி, இவற்றை ஏற்று பொறுமை காப்பதே ஒரு முஃமினது செயலாக இருக்க வேண்டும் என்பதை நபியவர்கள் தம் செயல் மூலம் மகளுக்கு சொல்லி அனுப்புகிறார்கள்.
'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!'

நபியவர்கள் தம் மகளுக்கு சொல்லி அனுப்பிய இந்த ஈமானிய பாடம் நம் அனைவரது உள்ளத்திலும் வேரூன்றிப் பதிய வேண்டும். நேசமான உறவுகளே இன்றி இந்த உலகில் வாழ்வோர் எவரும் இல்லை. ஒன்றோ நாம் பிரிய வேண்டிய சூழல் உண்டாகும் அல்லது நம்மைவிட்டு நாம் நேசித்த உறவுகள் பிரிய வேண்டிய சூழல்கள் உண்டாகும்.

எந்நிலையாக இருந்தாலும் அதை ஈமானிய உணர்வுகளோடு எதிர்கொள்ள பழக வேண்டும். அந்த உணர்வுகளை நம்மை படைத்த இறைவனைத்தவிர வேறு யாரும் நமக்கு ஏற்படுத்த முடியாது. இதற்காக இறைவனிடம் அதிகம் உதவி தேட வேண்டும்.

இதுபோன்ற சூழல்களை சந்திக்கும் நேரத்தில் மறதி எனும் சிறந்த அருட்கொடையை அல்லாஹ் நம்மீது விரைவாகப் பொழிந்து நமது உள்ளங்களை அமைதியுறச் செய்வானாக!!!!

Monday, November 20, 2017

இப்லீசிடம் அதிகம் மதிப்பிற்குரிய ஷைத்தான் யார் என்று உங்களுக்கு தெரியுமா???



இந்த தகவலை தெரியப்படுத்தும் முன் ஒன்றை அவசியமாக மக்களுக்கு பதிய வைத்துவிட வேண்டும். இப்லீஸ், ஷைத்தான் ஆகிய இருவரும் ஒருவர் தான் என்ற சிந்தனையில் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். ஆனால் இஸ்லாமிய அகீதா அவ்வாறு கிடையாது. இருவரும் ஒரே வேலையை செய்யக்கூடியவர்கள் தான் என்றாலும் இருவரும் வெவ்வேறானவர்கள் ஆவர். இப்லீஸ் என்பவன் மனிதனை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்விடம் நேரடியாக அனுமதி பெற்றவன் ஆவான். அவனது சந்ததிகள் தான் ஷைத்தான்கள் என்று அழைக்கப்படுவர். இப்லீஸ் என்பவன் ஷைத்தான்களின் தலைவனும் ஆவான். இந்த தகவலை ஆரம்பமாக தெரிந்து கொண்டால் தான் கீழ்காணும் செய்தியை இலகுவாக விளங்க முடியும்.

ஷைத்தான்களின் முழுநேரப்பணியே மனிதனை வழிகெடுப்பது தான். ஆனால் வழிகேடுத்தலில் பலவகையான அடிப்படைகள் உண்டு என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும். நாம் எதை பெரிதாக நினைக்கிறோமோ அவை பெரும்பாலும் ஷைத்தான்களால் அளட்டிக்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை. எதனை அற்பமானதாக கருதுகிறோமோ அதில் தான் ஷைத்தான் அதிகம் கவணம் செலுத்துவான். உதாரணத்திற்கு பொய் பேசுதல், புறம் பேசுதல், அவதூறு கூறுதல், பிறர் சொத்தை அபகரித்தல், பிறரது மானத்தில் சுயமரியாதையில் விளையாடுதல் போன்ற நம்மோடு கலந்துறவாடும் பல பாவங்களை நாம் கூறலாம். இவை அனைத்திற்கும் நாம் அற்பமான மதிப்பீடு உள்ளத்தால் கொடுத்து இருந்தாலும், இறைவனின் உபதேசங்களை படிக்கின்றபொழுது இவைகள் அனைத்தும் எத்தகைய கொடிய பாவங்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

இவை போன்ற பாவங்கள் இறைவனது பார்வையில் கடுமையானது ஆகும். ஆகவே தான் இவற்றை அற்பமானதாக ஷைத்தான் நமக்கு சித்தரித்து இவற்றிலேயே முழுநேர கவணமும் செலுத்தி நம்மை நரக விழிம்பில் தள்ள முயற்சிகளை அவன் மேற்கொள்வான். அவ்வாறு ஷைத்தான் அற்பமானதாக நமக்கு சித்தரிக்கின்ற பாவங்களில் தலையாய பாவம் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி விடுவதாகும்.

இந்த செயல் இல்லாத வீடுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரச்சனைகளை உள்ளத்தில் சுமந்தவராக ஆறுதல் தேடி கவலைகளோடு மனைவியை நோக்கி கணவர் வர, மனைவியோ தொலைக்காட்சியில் தொலைந்தவராய் கணவனின் அழைப்பிற்கு கர்வத்தோடு பதிலுரைக்க.... சண்டை சூடு பிடித்துவிடும். (உதாரணத்திற்காக ஒன்றை சொன்னேன்) இது இயல்பாக நடக்கும் விஷயமாகிப்போய் விட்டது!!!

கோபம் ஷைத்தானால் தூண்டப்படும் குணம் ஆகும். இதுபோன்ற புரிந்துணர்வு இன்மை காரணமாக கோபத்தை தூண்டிவிட்டு பலவகைப் பிரச்சனைகளை ஷைத்தான் கணவன் மனைவி உறவுக்குள் தூண்டிவிடுகிறான்.

இதேபோன்று சதாவும் பலவகையான பிரச்சனைகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்றாடம் நடப்பதும் அந்த பிரச்னைகள் சாதுவானவையாக இருந்தாலும் கூட அவற்றை விவாகரத்து வரைக்கும் இழுத்து கொண்டு செல்வதும் இன்றைய கால மக்களுக்கு மிகச் சாதாரணமாகி விட்டது.

இந்த செயலையும் நாம் பாவக்காரியமாக பார்ப்பதில்லை. ஆனால் கீழ்காணும் நபியின் வார்த்தைகளை கவணித்தால் இது எத்தகைய குற்றமாக இறைவனது பார்வையில் உள்ளது என்பதனையும், இப்லீஸ் இந்த வழிகேட்டை எத்தனை உயர்வாக பார்க்கிறான் என்பதனையும் விளங்கிக்கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்)நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்" என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை" என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை" என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, "நீதான் சரி(யான ஆள்)" என்று (பாராட்டிக்) கூறுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன். 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5419.

தேவையற்ற குடும்ப பிரச்சனைகளின் காரணத்தால் இப்லீசிடம் ஷைத்தான்கள் உயர்ந்த மதிப்பெண்களை பெற்றுக்கொள்ள நாம் துணையாக இருக்கிறோம். இப்லீசிற்கு விருப்பமான செயல் இறைவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் செயல் ஆகும். ஆகவே இதில் கவணமாக நாம் செயல்பட வேண்டும். எப்பொழுதும் நாம் இறைவனின் அன்பை பெறவே இவ்வுலகில் செயல்பட வேண்டும், இப்லீஸை மகிழ்விக்க அல்ல.


எல்லாம் வல்ல இறைவன் இனியாவது நமது வாழ்வை திருத்தமாகவும் மகிழ்வாகவும் புரிந்துணர்வோடும் திருப்பிவிடுவானாக!!!

Tuesday, November 14, 2017

மரணித்தோரை மறந்துவிட வேண்டாம்!!!



இறைவன் மனிதர்களுள் ஏற்படுத்திய அதிசயமான ஒரு உணர்வு தான் மறதி என்கின்ற உணர்வாகும். இந்த உணர்வு அவசியம் சில நிலைகளில் நமக்குள் ஏற்பட வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால்தான் நாம் இயல்பாக இந்த உலகத்தில் நடைபோட முடியும்.

ஆனால் சில விஷயங்களை நாம் மறக்க கூடாது அதிகம் அதிகம் நினைவுபடுத்த வேண்டும் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் ஆகவே முக்கியமான ஒன்று தான் மரணம். நமது வாழ்வு பரிசுத்தமாவதற்கு மரண சிந்தனை என்பது மிகப்பெரிய ஆயுதமாகும்.

இதேபோன்று நாம் மறக்கக்கூடாத ஒரு முக்கியமான செயல் ஒன்று உள்ளது. நபியவர்கள் தாம் வாழ்ந்த காலம் வரைக்கும் மறக்காமல் செயல்படுத்தி வந்த ஒரு அழகிய செயல் அது. அதுதான் தம்மோடு வாழ்ந்து மரணித்த அன்புத்தோழர்களை தாம் மரணிக்கின்ற வரை மறவாமை இருந்த குணமாகும்!!!

தம்மைவிட்டு மறைந்து விட்டார்கள் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மக்களை மறக்கவில்லை. ஜன்னத்துல் பகீ எனும் அடக்கஸ்தலத்திற்கு அதிகமாக நேரம் ஒதுக்கி செல்லும் வழக்கம் நபியவர்களிடம் இருந்தது. அங்கு சென்று அந்த தோழர்களுக்காக அதிகமாக பிரார்த்தனை செய்வார்கள். நபியின் இந்த வழிகாட்டல் நம்மில் அதிகமானோரின் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. இறைவன் கூட நல்ல மனிதர்களின் குணங்களில் ஒன்றாக கீழ்காணும் பிராத்தனை இருந்ததாக கூறுகிறான்....

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ

"எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!
திருக்குர்ஆன் 59:10

ஆனால் இன்றைய நமது நிலையை உரசிப்பார்க்கும் பொழுது ஊரில் எவரேனும் மரணம் என்றால் மட்டும்தான் மண்ணறை சந்திப்போ பிரார்த்தனையோ வெளிப்படுகிறது????!!!!! இந்த நிலை இப்படியே தொடருமாக இருந்தால் நாளை நாம் மண்ணறைக்குள் வைக்கப்படும் பொழுது கூட இதே பலவீனமான நிலையே மக்கள் மத்தியில் தொடரும். நமக்காக பிரார்த்தனை செய்ய எவரும் இருக்க மாட்டார்கள்.

மரணித்த நபர்களை எண்ணி மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்க கூடாது என்றுதான் மார்க்கம் சொல்கிறதே தவிர அவர்களை அடியோடு மறந்துவிட வேண்டும் என்று மார்க்கம் போதிக்கவில்லை.

நமது தவறுகளுக்காக மண்ணறையில் நம்மை இறைவன் தண்டிப்பானாக இருந்தால் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) உயிரோடு இந்த உலகத்தில் வாழும் நமது சன்மார்க்க உறவுகள் நமக்காக கேட்கும் பிரார்த்தனைகள் பயனளிக்க வாய்ப்புள்ளது அல்லவா??? ஆகவே தான் நபிகளார் இதனை நமக்கு வழிகாட்டினார்கள்.

நம்மோடு வாழ்ந்து மரணித்த நபர்களை ஒருகணம் எண்ணிப்பாருங்கள். அவர்களது குற்றத்திற்காக அவர்களை இறைவன் தற்போது தண்டித்து கொண்டிருந்தால்???!!!

நாம் அவர்களுக்காக இறைவனிடம் கண்ணீர் வடித்தால் இறைவன் நிச்சயமாக அந்த நபர்களை மன்னிப்பான் (அவர்கள் இணைவைக்காது மரணித்து இருந்தால்). அவ்வாறு மன்னிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதற்காகவே திருமறையில் நாம் மேலே சுட்டிக்காட்டிய பிரார்த்தனையை இறைவன் பதிய வைத்துள்ளான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நம்மோடு வாழ்ந்த ஈமானிய உறவுகளை நினைவு படுத்துங்கள்!!! அவர்களது பாவக்கறைகளை கருணையாளன் மன்னிப்பதற்காக உங்கள் பிரார்த்தனைகளில் அவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!!!

நம் வாழ்வு பரிசுத்தமாவதற்காகவும், மறுமையின் முதல் எட்டை தொட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணறைவாசிகளின் வாழ்வு பரிசுத்தமாவதற்காகவும் நேரம் ஒதுக்கி அடக்கத்தலங்களை சந்திப்போமாக!!!!

இந்த செயலுக்கு உயிரோட்டம் கொடுக்காததன் விளைவு நாளை நம்மையும் பாதித்து விடும் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்.

செயல்படுத்துவோம்....! செயல்பட தூண்டுவோம்....!