தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, June 6, 2016

தவிர்ப்போம் தலைப்பிறை கொண்டாட்டத்தை!



அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சொந்தங்களே! இன்ஷா அல்லாஹ் ஷஅபான் 29 அன்று ரமளானின் முதல் பிறை தேட வேண்டிய நாள்.  நமது சமூக மக்கள் மத்தியில் ரமலான் முதல் பிறை பார்க்கப்படுவது என்பது தலைப்பிறைஎன்கிற பெயரால் சில பகுதிகளில் கொண்டாட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைப்பிறை அன்றைக்கு வீடுகள் அனைத்தும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் வீட்டிற்கு பரக்கத் கிடைக்காது என்பதைப் போன்ற ஒரு தோரனையை ஏற்படுத்தி கொண்டு, ரமளானின் முதல் பிறையை அடையும் நாளில் வீட்டை சுத்தம் செய்கின்ற மக்களை பார்க்கிறோம்.

இன்னும் சில இடங்களில், மாற்று மத மக்கள் பொங்கல் விழாவின் போது வீதிகளில் பொங்கல் வைப்பதைப் போன்று பொங்கல் வைத்து சப்தமிட்டு குலவையிடுவதையும் பார்க்கிறோம்.

முதலில் இவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை நம் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். மார்க்கத்தின் பெயரால் நாம் ஒன்றை செய்வதாக இருந்தால் நாம் யாரிடம் இருந்து இந்த மார்க்கத்தை பெற்றோமோ அந்த அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டலில் அவைகள் இருக்க வேண்டும். நாமாக ஒன்றை உருவாக்கி அதற்கு இஸ்லாமிய சாயம் பூசுவதென்பது ஒருபோதும் இஸ்லாமியக் கலாச்சாரம் ஆகாது.

ரமலான் மாதம் என்பது புனிதமான மாதம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த மாதத்தின் முதல் நாள் இவ்வாறு தான் நமது வீடு இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நம் வீடு புனிதத்தை இழந்துவிடும், தரித்திரம் பிடித்துவிடும் என்று சொல்வதற்கு நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ரமலான் மாதத்தின் சிறப்புக்கள் அனைத்தும் நமக்காகத்தானே தவிர உயிரற்ற வீட்டிற்காக கிடையாது. ரமலான் மாதம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம் நாம் பாவங்களை விட்டு சுத்தமாக வேண்டும் என்பதற்குத்தானே தவிர வீட்டை சுத்தப்படுத்துவதற்காக கிடையாது. அவ்வாறு ஒருவர் வீட்டை சுத்தப்படுத்தாவிட்டாலும் எந்த குற்றமும் கிடையாது. அவர் செய்யக்கூடிய செயல்களுக்கான நன்மைகள் அவருக்கு கிடைத்தே தீரும். சுத்தம் என்பது எல்லா காலத்திலும் பேண வேண்டிய ஒரு பகுதியாகும். ஆகவே தான் அதை ஈமானோடு நபியவர்கள் இணைத்து சொன்னார்கள். பொதுவாக எல்லா நேரங்களிலும் சுத்தம் அவசியம் என்பதே மார்க்கத்தின் வழிகாட்டல் ஆகும். ஆகவே ஏதேனும் ஒரு நாளை வைத்து சடங்குகளை உண்டாக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை. அவ்வாறு நபியவர்கள் செய்யவும் இல்லை.

அதேபோன்று தெருத்தெருவாக பொங்கல் வைத்து குலவையிடுவதும் இன்னொரு மதம் சார்ந்த வழிபாட்டுக் கலாச்சாரம் ஆகும். இதுபோன்று நபியவர்கள் ரமலான் முதல்பிறை அன்று, தாம் வாழ்ந்த காலகட்டத்தில் செய்ததே கிடையாது.

வருடா வருடம் இவ்வாறு நடந்து கொள்ளும் தாய்மார்கள் தமது செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த ஒரு காரணமே போதும் நம்மை கொடிய நரகில் வீழ்த்துவதற்கு!

உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்"
முஸ்லிம்  (1573).

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
''உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456).

அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா?" என்று கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை; இதோ இந்த வாளுறையில் இருப்பதைத் தவிர" என்று கூறிவிட்டு, ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்.
முஸ்லிம் (4003). 

அல்லாஹ் மிக அறிந்தவன்....!

No comments:

Post a Comment