மக்களிடம் நம் ஜமாஅத்திற்கு வாங்கப்படும் நன்கொடைகளை
அவர்களிடம் எந்தப் பணிக்காக வாங்கினோமோ அது அல்லாத மற்ற பணிகளுக்குப்
பயன்படுத்துவது கூடுமா?
இஸ்லாத்தைப் பொறுத்தவரை வாக்குறுதிகளை அப்படியே நிறைவேற்ற வேண்டும்.
வாக்குறுதிகளும் அல்லாஹ்விடம் விசாரிக்கப்படும்.
பார்க்க, திருக்குர்ஆன் 2:177, 17:34, 23:8.
எனவே எந்தக் காரியத்தைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதோ அந்தப் பணிக்குத்தான்
செலவிட வேண்டும். நோன்புக்
கஞ்சிக்காக நிதி திரட்டி பள்ளிவாசல் கட்டுவதற்குச் செலவிட்டாலும் அது "மோசடியாகும்".
குறிப்பிட்ட ஒரு பணியைச் சொல்லாமல் ஜமாஅத்தின் நோன்புக் கஞ்சி மற்றும்
சமுதாயப்பணிகள் வகைக்கு என்று
தெளிவுபடுத்தி நிதி திரட்டினால் மற்ற சமுதாயப் பணிகளையும் சொல்லி
திரட்டியதால் இதில் எந்த மோசடியும் இல்லை.
அதுபோல் உத்தேசமாக ஒரு தொகையை நிர்ணயித்து சில பணிகளுக்கு நிதி திரட்டப்பட்டு
அதில் மீதமாகும் நிலை ஏற்படலாம்.
உதாரணமாக கூட்டுக் குர்பானிக்காக ஒரு மாட்டின் விலை இவ்வளவு அல்லது ஒரு பங்கின்
விலை இவ்வளவு என நிர்ணயம் செய்கிறோம். ஆனால் அந்த நிதியில் மாட்டின் அதிகபட்ச விலை
அடிப்படையில் நாம் நிர்ணயம் செய்கிறோம். ஆனால் விலை குறைவாக கிடைத்தால் சில
ரூபாய்கள் மீதமாகி விடும். இந்தப் பணத்தை தெருவில் வீச முடியாது என்ற அடிப்படையில்
அது போன்ற நல்ல பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்றாலும் நாம் நிதி திரட்டும்போதே குர்பானியில் மீதமாகும்
பணத்தை ஜமாஅத்தின் நற்பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வோம் என்று விளம்பரம் செய்து
விடவேண்டும்.
இதற்கு உடன்பட்டே மக்கள் நிதி தருவதால் குர்பானி கொடுத்த பின் மீதமாவதை எந்த
நற்பணிக்கும் பயன்படுத்திக் கொள்வதில் எந்த மோசடியும் இல்லை.
அதே நேரத்தில் வேறு வகைக்குப் பணம் திரட்டுவதற்காக மக்களை ஏமாற்றும் நோக்கில்
குர்பானி, நோன்புக் கஞ்சியைப் பயன்படுத்தி பெரும் நிதி திரட்டுவதை ஏற்றுக்கொள்ள
முடியாது.
உணர்வு வார இதழ்
நவம்பர் 27 - டிசம்பர் 03, 2015.
No comments:
Post a Comment