தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, November 29, 2014

சூனியம்


கேள்வி
சூனியக்காரன் சுயமாக சூனியம் செய்வான் என்று நாங்கள் சொல்லவில்லை. அல்லாஹ் நாடினால் அவன் செய்வான் என்றுதான் சொல்கிறோம். இது குற்றமா? என்று கேட்கிறார்கள். அல்லாஹ் நாடினால் செய்வான் என்று சொல்வது எப்படி குற்றமாகும்?
பி. அன்வர் பாட்சா, பெரியமேடு

பதில்
அல்லாஹ் எதைச் செய்வான்? எதைச் செய்ய மாட்டான் என்று அல்லாஹ்வால் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டு விட்டது. 
அல்லாஹ் எதைச் செய்வான் என்று சொல்லப்பட்டுள்ளதோ அந்த விஷயத்தில் தான் அல்லாஹ் நாடினால் என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். அல்லாஹ் எதைச் செய்யமாட்டான் என்று சொல்லப்பட்டுள்ளதோ அந்த விஷயங்களில் அல்லாஹ் நாடினால் என்று சேர்த்துச் சொன்னால் அதுவும் இறை மறுப்பாகும்.
அல்லாஹ் நாடினால் செத்து போவான் என்று சொல்லி விட்டு நான் செத்துப் போவான் என்றா சொன்னேன்? (நவூது பில்லாஹ்) அல்லாஹ் நாடினால் தான் என்று சேர்த்துச் சொன்னேன் என்று சொன்னால் அது சரியான நம்பிக்கை என்று கூறுவார்களா?
இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
அல்லாஹ் நாடினால் சாப்பிடுவான் அல்லாஹ் நாடினால் தூங்குவான் என்று சொன்னால் இவர்கள் ஒப்புக் கொள்வார்களா? 
இதை அல்லாஹ் நாட மாட்டான் என்று தெளிவுபடுத்திய பின் அல்லாஹ் நாடினால் செய்வான் என்று ஒரு முஸ்லிம் சொல்ல முடியுமா?
தன்னைப் போல் செயல்படும் தன்மையை அல்லாஹ் யாருக்கும் வழங்க மாட்டான் என்று நம்புவதுதான் ஈமான்.
எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.
"சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.  ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!
திருக்குர்ஆன் 17:111
அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.  அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
திருக்குர்ஆன் 25:2
அல்லாஹ் நாடினால் சிலைகள் மூலம் காரியம் நடக்கும் என்று கூட இந்த அறிவீனர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.
உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?
திருக்குர்ஆன் 16:71
அறிவற்ற மூடர்களே உங்களின் சின்ன அதிகாரத்தைக் கூட நீங்கள் இன்னொருவனுக்குக் கொடுக்காத போது மாபெரும் ஆற்றல் பெற்ற நான் என்னைப் போல் செயல்படும் அதிகாரத்தை எப்படி சூனியக்காரனுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுக்குச் சொல்வது போல் இந்த வசனம் அமைந்துள்ளது.
இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.

No comments:

Post a Comment